"டிஸ்மிஸ்".. 356ஐ கையில் எடுங்கள்.. தமிழ்நாடு அரசை கலையுங்கள்.. பாஜக புள்ளி பரபர கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இதை தமிழ்நாடு அரசு எதிர்த்த நிலையில் உயர் நீதிமன்றம் சென்று ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் வாதம் வைத்தது.

தடை
இந்த நிலையில்தான் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர். சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தடை விதிக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் பேரணி உள்ளிட்ட எந்த பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு போலீஸ் தெரிவித்துள்ளது. . இந்த முடிவிற்கு எதிராக ஆர்எஸ்எஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் அனுமதியளித்தது. பெரும்பாலும் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வினோஜ் பி செல்வம்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்விட்டில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை சரியில்லை என கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. சட்டம் ஒழுங்கு மோசம் என்று காவல்துறை ஒப்புக் கொள்கிறதா? அப்படியானால் சட்டப்பிரிவு 356யை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கில்லாத மாநிலத்தின் அரசை கலைத்தால் என்ன? என்று குறிப்பிட்டு உள்ளார்.

சட்ட ஒழுங்கு
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆங்கங்கே பல்வேறு மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுக்க 18க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பதற்றமான இடங்கள், மாவட்டங்களில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

எச். ராஜா
இதேபோல் இன்று காலைதான் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கோரிக்கை வைத்தார். அதில், 1991 ல் எல்.டி.டி.ஈ க்கு அரசு தகவல் கசிய விட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. எனவே தற்போது தடை செய்யப்பட்டுள்ள PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழக அரசிற்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை PFI க்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார் மீதுநடவடிக்கை தேவை, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications