ஜேஎன்யூ ரிசல்ட் ட்ரெயிலர்தான்.. லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கும்.. அடித்து சொல்லும் மனோ தங்கராஜ்
சென்னை: கருத்துக்கணிப்பில் வேண்டும் என்றால் 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்படலாம் ஆனால் உண்மையில் பாஜக படு தோல்வியையே சந்திக்கும். குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே தான் வாக்குகள் பெறும் என்று டெல்லி ஜேஎன்யூ தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
நாட்டின் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். ஜேஎன்யூ எனப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடந்தது. அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புக்கும் வலதுசாரிக்கு போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் வலது சாரி அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரி கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் தனஞ்செய் வெற்றி பெற்றார். 922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் உமேஷ் சந்திரா தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், டெல்லி ஜேஎன்யூ தேர்தலை முன் உதாரணம் காட்டி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவும் இதேபோலத்தான் கருத்துக்கணிப்பில் வேண்டும் என்றால் 400 தொகுதிகளில் ஜெயிப்பதாக கூறப்படலாம் ஆனால் உண்மையில் பாஜக தோல்வியையே சந்திக்கும். குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே தான் வாக்குகள் பெறும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மனோ தங்கராஜ் கூறியிருப்பதாவது:- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர்.
வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது. இதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் சுமார் 7,000-க்கும் அதிகமானோர் வாக்களித்ததில், 955 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் உமேஷ் சந்திரா அஜ்மீராவை இடதுசாரி மாணவர் கூட்டமைப்பின் தனஞ்செய் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இடதுசாரியான அவ்ஜித் கோஷ், பாஜகவின் ஏபிவிபியின் தீபிகா சர்மாவை 927 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.
இதேபோல பொதுச் செயலாளர் பதவி, இணைச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலிலும் பாஜகவின் ஏபிவிபி வேட்பாளர்களை இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பினர் வீழ்த்தினர். இத்தேர்தல் மூலமாக மொத்தம் 42 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ள தனஞ்ஜெய், பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications