அவர் கழற்றிவிட்டுவிடுவார்.. உஷாரான பாஜக.. எடப்பாடி "சிறகுகளை" உடைக்கும் டெல்லி.. என்ன நடக்கிறது?
சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் வலிமையான தலைவர் ஆகிவிட கூடாது என்பதால் அவரை குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த மோதலில் பாஜகவின் சப்போர்ட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை இருப்பதை பாஜக விரும்புகிறதா? அல்லது ஓபிஎஸ்ஸை இணைத்துக்கொண்டு இரட்டை தலைமை இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு இருந்தார். எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைக்கப்படாமல், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் இவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருந்தார். கிட்டத்தட்ட டெல்லி பாஜக எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாகவே இதில் பார்க்கப்பட்டது.

குஜராத் ஓ பன்னீர்செல்வம்
இன்னொரு பக்கம் குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். பாஜக குஜராத் மாநில நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படி.. ஒருபக்கம் ஓ பன்னீர்செல்வத்தை குஜராத் அழைப்பது.. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியை டெல்லி ஜி 20 கூட்டத்திற்கு அழைப்பது என்று பாஜக இரண்டு விதமான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் சப்போர்ட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க பாஜக நினைக்கிறதா?
பதில்: எடப்பாடியை குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. எடப்பாடிக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் கர்நாடகாவில் ஒப்பந்தம் எடுத்து சிபிஐ வளையத்தில் இருக்கிறார். தங்களுக்கு பிடிக்காதவர்களை பாஜக எப்படி வழக்குகள், ரெய்டுகள் மூலம் நெருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். இரட்டை தலைமைக்கு கீழ்தான் இருக்க வேண்டும். ஒற்றை தலைமை இருக்க கூடாது. அப்படி இருந்தால்தான் பாஜகவிற்கு நல்லது என்று பாஜக நினைக்கிறது. அதைத்தான்தான் எடப்பாடி உடைத்து இருக்கிறார். எடப்பாடி தன்னை ஜெயலலிதா என்று நினைக்கிறார். அது தவறு என்றாலும், கட்சிக்கு உள்ளே அப்படி நினைக்க அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இதைத்தான் பாஜக விரும்பவில்லை.

இரட்டை தலைமை
ஆனால் ஓபிஎஸ் இப்படி இல்லை. ஓபிஎஸ் இரட்டை தலைமையை விரும்புகிறார். ஓபிஎஸ் ஆதரவு இல்லை செல்லாக்காசு ஆகிவிட்டது. 95 சதவிகித எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எடப்பாடி வசம்தான் இருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் வசம் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். கட்சியில் பெரும்பான்மை ஆதரவு என்னவோ எடப்பாடிக்குத்தான் இருக்கிறது. எடப்பாடியை அரசியல் களத்தில் சந்திக்க, சமாளிக்க, எதிர்க்க ஓ பன்னீர்செல்வத்திடம் வலிமை இல்லை. இதனால்தான் நீதிமன்ற படியேறுகிறார். சட்டம் மூலம் தனக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் நினைக்கிறார்.

வலிமையான தலைவர்
இன்னொரு பக்கம் அதிமுகவில் வலிமையான தலைவர் உருவாவதை பாஜக விரும்பவில்லை. ஜெயலலிதா போல இன்னொரு தலைவர் உருவாவதை பாஜக விரும்பவில்லை. அதிமுக இரட்டை தலைமையால் வலிமை இழக்க வேண்டும். காலப்போக்கில் அதிமுக மரணிக்க வேண்டும். அந்த இடத்தில் பாஜக வர வேண்டும். இதுதான் பாஜகவின் திட்டம். இதை வெளிப்படையாக அண்ணாமலையே கூறிவிட்டார். 2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை சொன்னது எதை வைத்து. பாஜகவிற்கு அதிமுக வேண்டும். ஆனால் வலிமையான அதிமுக வேண்டாம். இரட்டை தலைமை இருக்க வேண்டும், தான் சொன்னதை எல்லாம் கேட்க வேண்டும்.

எடப்பாடி கை ஓங்க கூடாது
எடப்பாடி கை ஓங்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. எடப்பாடி தங்களை கழற்றிவிட்டுவிடுவார் என்று பாஜகவிற்கு தெரியும். 2026 தேர்தலில் பாஜகவை எடப்பாடி கழற்றிவிட்டுவிடுவார் என்று மோடிக்கு தெரியும். பாஜக எதிர்ப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்று எடப்பாடிக்கு தெரியும் என்பதால் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட பார்ப்பார். தமிழ்நாட்டில் பாஜக மீது கடும் எதிர்ப்பு உணர்வு உள்ளது. இதனால் அதிமுக வழியாக எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் வர பாஜக நினைக்கிறது. ஆனால் ஒரு தேர்தலில் இப்படி நடக்காது. தமிழ்நாட்டில் பாஜக வளர பல தேர்தல்கள் தேவைப்படும்.

தனியாக எதிர்க்க முடியாது
திமுகவை பாஜகவால் தனியாக எதிர்க்க முடியாது. இது பாஜகவிற்கே தெரியும். அதனால்தான் அதிமுக உதவியுடன் தமிழ்நாட்டில் நுழைய பாஜக பார்க்கிறது. பலவீனமான அதிமுகவை பாஜக விரும்புவது இதனால்தான். அதிமுகவை பயன்படுத்தி வளர்த்துவிட்டு பின்னர் அதிமுகவை வீழ்த்த பாஜக பார்க்கிறது. இதனால்தான் எடப்பாடியை பாஜக விரும்பவில்லை. அவர் வலிமையான தலைவர் ஆக பார்க்கிறார். அதனால் அவரின் சிறகுகளை வெட்ட பாஜக நினைக்கிறது.

எடப்பாடி
வலிமையான தலைவரை சாய்க்க வேண்டும் என்றால் அவருக்கு இருக்கும் ஆதரவுகளை குறைக்க வேண்டும். அதாவது அவருக்கு இருக்கும் சிறகுகளை வெட்ட வேண்டும். இதைத்தான் பாஜக செய்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் குறி வைக்கப்பட இதுதான் காரணம். விஜயபாஸ்கர் மீது சிபிஐ நெருக்கடிகளை கொடுக்க இதுதான் காரணம். இது தொடர்ந்து நடக்கும், என்று பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications