5 மாநிலங்களில் பாஜகவுக்கு ஆபத்து?.. ஒரே நாடு ஒரே தேர்தல் உண்மை ரகசியம் இதுதான்!
பாஜக ஆட்சிக்காலம் விரைவில் முடியப் போகிறது. விரைவாக மக்களவைத் தேர்தலை நாடு எதிர்கொள்ளப் போகிறது. அதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன.
இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஒன்றிய பாஜக அரசு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்?' என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது என்பது சாத்தியமா? நடைமுறைக்கு உதவுமா? எனப் பல கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணனிடம் முன்வைத்தோம். அவர் என்ன சொல்கிறார்? அவரது கருத்து என்ன?
"நிச்சயமாகச் சாத்தியமில்லை. இப்போது ஒரு குழுவை அமைத்துள்ளதாகப் பத்திரிகை வாயிலாகத் தகவலைக் கசிய விட்டுள்ளார்கள். இன்னும் அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்படவே இல்லை. நான் என்ன யோசிக்கிறேன் என்றால், 'இந்தியா' என்ற கூட்டணி பேசுபொருளாக மாறி இருப்பதைத் திசை திருப்புவதற்காகவே இதைக் கசிய விட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்னால் ஜூன் மாதத்தில் பெங்களூருவில் 'இந்தியா' கூட்டணியின் கூட்டம் நடத்தப்பட்டபோது, இதைப் போலவே அவசர அவசரமாகத் தமிழ்நாட்டிலிருந்து ஜான்பாண்டியன், ஏசிஎஸ், ஐஜேகே பச்சைமுத்து போன்ற ஒரு காலத்திலும் தேர்தலில் நின்றால் ஜெயிக்கவே முடியாத, கட்சித்தலைவர்களைக் கூப்பிட்டு 38 கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துவிட்டோம் என்று பாஜக சொன்னது.
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விவாதமும் ஒரு திசை திருப்பல்தான். இது சாத்தியமே இல்லாத ஒரு திட்டம். அதை நடைமுறைப்படுத்த முடியாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல; மாநில சுயாட்சிக்கும் எதிரான கொள்கை. மாநிலக் கட்சிகளை ஏறத்தாழ ஒடுக்குகின்ற, அடுக்க நினைக்கிற செயல்.

நான் கூட, 'One nation why election' என்றுகூடப் போய்விடுங்களேன் என்று நகைச்சுவையாக ஒரு விவாதத்தில் குறிப்பிட்டேன். அப்படி என்றால் பஞ்சாயத்து போர்டு தேர்தல், நகர்மன்ற தேர்தல் என உள்ளாட்சித் தேர்தலையும் ஒரே நாடு ஒரே தேர்தலுடன் சேர்த்து நடத்திவிடலாமா?
வரும் டிசம்பரில் 5 மாநிலங்களின் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தல்களில் பாஜக கணிசமாகத் தோல்வியடைந்துவிட்டால், அதன் மூலம் அடுத்த ஆண்டு வரப்போகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மிகக் கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்துவிடும் என்ற பயத்தால்தான் இப்படி ஒரு முழக்கத்தை முன்வைக்கிறது ஒன்றிய அரசு.

வரும் டிசம்பரில் 5 மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டசபைத் தேர்தல்களில், ஏறத்தாழ 4 மாநிலங்களில் இன்றைக்கு உள்ள அரசியல் நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தெலங்கானாவிலும் ராஜஸ்தானிலும் கணிசமான இடங்களைக் காங்கிரஸ் வந்துவிட்டால், மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் அரசு அமைக்கக் கூடிய அளவுக்குக் காங்கிரஸ் கட்சி முன்னேறிவிட்டால், அது பாஜக ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக அமையும் என்பதே அரசியல் கணக்கு. இங்கிருந்துதான் பாஜகவுக்குப் பயம் வருகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக இப்படித்தானே தேர்தல் நடந்துகொண்டுள்ளது? நாடு என்ன கெட்டு விட்டது? இந்தத் தேர்தல் முறையை வைத்துக்கொண்டுதானே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் உள்ள 27 கோடி மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மேலே கொண்டுவந்தார்?

ஆனால், இன்றைக்கு மேலே கொண்டு வந்த மக்களை எல்லாம் மீண்டும் பாஜக வறுமைக்கோட்டுக்குக் கீழே அனுப்பிவிட்டது. அது வேறு விஷயம்.
இப்படித்தான் தனக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஜெயலலிதா அரசு அதிகாரிகளுக்கு எதிராக டெஸ்மா சட்டத்தைக் கொண்டுவந்தார். மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார். ஆடு, கோழி பலியிடுவதற்குத் தடை விதித்தார். அதனால் மக்கள் கொதிப்படைந்தார்கள்.
அதன் பிறகு வந்த 2004இல் நடைபெற்ற மக்களைவை தேர்தலில் அதிமுகவுக்கு 40 இடங்களில் ஒரு இடம்கூட கிடைக்காமல் போனது. அதன்பிறகு எல்லா சட்டங்களையும் ஜெயலலிதா திரும்பப் பெற்றார்.

ஸ்டாலின் ஆட்சி கலைக்கப்படும், மம்தா ஆட்சியையும் கலைப்பார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னால் பெங்களூருவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியும் போய்விடும் என்று பலரும் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
"அப்படி எல்லாம் செய்ய முடியாது. நாடே பற்றி எரிந்துவிடும். 2018இல் இதே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை ஏற்கமுடியாது என்ற எடப்பாடி பழனிசாமி, திடீரென்று இப்போது ஆதரிக்கிறேன் என்கிறார். எனது கணிப்பின்படி டிசம்பரில் தேர்தல் வர வாய்ப்பே இல்லை. தேர்தலை நடத்தக் குறைந்தது 10 லட்சம் இவிஎம் எந்திரங்கள் வேண்டும்.

அதைத்தாண்டிப் பல சட்டங்களை மாற்ற வேண்டும். இதற்காக 5 மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும். அந்த 5 சட்டங்களையும் மாற்றுவது சுலபமல்ல; அதை முழுமையாக மாற்றி அமைத்து எழுதுவதற்குக் கால அவகாசம் தேவை.
ஒருவேளை டிசம்பரில் முடிவடைய உள்ள சில மாநிலங்களின் கால அளவை நீட்டிக்கச் செய்யலாம். அதன் பிறகு வேண்டுமானால், சட்டங்களை மாற்றி ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வாய்ப்பு வரலாம். அதுவும் உறுதி இல்லை.
இப்படி ஸ்திரத் தன்மை இல்லாமல் திடீர் திடீரென்று சில முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படித்தான் பணமதிப்பிழப்பைக் கொண்டுவந்தார்கள். இப்படித்தான் ஜிஎஸ்டியை கொண்டுவந்தார்கள். இந்தத் திடீர் அறிவிப்புகள் மூலம் என்னென்ன விளைவுகள் நடந்தது என்பதை நாடே அறியும்" என்கிறார்.

அடுத்ததாகக் கருத்து தெரிவித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், " இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே இல்லாத ஒரு திட்டம். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
1996இல் நாடாளுமன்றத்திற்கு ஒரு தேர்தல் வந்தது. அது கலைக்கப்பட்டு அடுத்து 1998இல் இன்னொரு தேர்தல் வந்தது. மீண்டும் கலைக்கப்பட்டு 1999இல் மறுபடி தேர்தல் வந்தது. இப்படி வரும் காலங்களில் மூன்று முறை நாடாளுமன்ற கலைக்கப்பட்டால், உடனே எல்லா மாநில அரசையும் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்துவார்களா?

அப்படி இல்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலின்போது மாநிலத் தேர்தலும் நடந்து, அதில் ஏதாவது ஒரு மாநிலம் கலைக்கப்பட்டால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அங்கு ஆளுநர் ஆட்சிதான் நடத்தப்படுமா? மீண்டும் இடைத்தேர்தலே வராதா? கலைக்கப்படும் மாநில அரசின் அதிகாரத்தை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்ளுமா?
இது ஜனநாயகமா? இது ஜனநாயக விரோத செயல் இல்லையா? அதை எப்படித் திமுக ஆதரிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார்












Click it and Unblock the Notifications