எங்கே தொட்டால் எடப்பாடிக்கு வலிக்குமோ.. அங்கெல்லாம் "பாஜக" தொட போகிறது.. ஆஹா.. பறந்து வந்த வார்னிங்!
சென்னை: எங்கே தொட்டால் எடப்பாடிக்கு வலிக்குமோ அங்கெல்லாம் பாஜக தொடும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நேற்று குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர பாகல் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்று இருந்தார். குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். பாஜக குஜராத் மாநில நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
டெல்லி ஜி 20 கூட்டத்திற்கு எடப்பாடி அழைக்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் குஜராத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளார். பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

ஓபிஎஸ் குஜராத் பயணம்
கேள்வி: குஜராத் முதல்வரின் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
பதில்: அதிமுகவில் இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் குட்புக்கில் வைக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இன்னும் சொல்லப்போனால், மெஜாரிட்டியாக இருக்கும் எடப்பாடியை பாஜக விரும்பவில்லை. மைனாரிட்டியாக இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தைதான் பாஜக விரும்புகிறது. ஓபிஎஸ் என்பவர் மோடியின் சாய்ஸ். தர்மயுத்த பின் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம், மோடி சொல்லித்தான் இணைந்தேன் என்று கூறி உள்ளார். அப்படி என்றால் மோடியின் சாய்ஸ் ஓபிஎஸ் என்பது தெளிவாகிறது. குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் அழைக்கப்பட்டுள்ளார். எடப்பாடி அழைக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. எடப்பாடியை டெல்லிக்கு அழைத்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு சமாதானம் சொல்லும் விதமாக குஜராத் அழைப்பு சென்றுள்ளது.

ஆறுதல் பரிசு
ஓ பன்னீர்செல்வத்திற்கு இப்பொது கிடைத்து இருப்பது ஆறுதல் பரிசு. கட்சி என்னவோ எடப்பாடி கையில்தான் இருக்கிறது. எடப்பாடி தவறு மேல் தவறு செய்து கொண்டு இருக்கிறார். எல்லோரையும் அரவணைத்து சென்றதால்தான் அவரால் கட்சியை காப்பாற்ற முடியும். ஆனால் அவர் அதை செய்வது இல்லை. எடப்பாடிக்கு தான் ஒன்றும் ஜெயலலிதா இல்லை என்பது தெரிய வேண்டும். அந்த புரிதல் அவருக்கு இன்னும் வரவில்லை. அவருக்கு இன்னும் அந்த புரிதல் வராதது துர்திஷ்டம். டிசம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு வழக்கு நடந்தது. ஆனால் இதில் பெரிய உத்தரவு வரும் வாய்ப்புகள் இல்லை. இது போன வழக்குகளில் வாய்தா, வாய்தா போடுவார்கள்.

இரண்டு தரப்பும் வீக்
இதன் மூலம் இரண்டு தரப்பும் வீக் ஆகும். இதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எளிதாகும். அதிமுக விவகாரம் அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை. ஆனால் இதில் நீதித்துறை சார்பாக ஓ பன்னீர்செல்வம் தீர்வு வேண்டுகிறார். அவருக்கு இதில் தீர்வு கிடைக்காது. அப்படியே தீர்வு கிடைத்தாலும் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. அது இன்னும் ஓ பன்னேர்செல்வத்திற்கு புரியவில்லை. அவர் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும். நீதிமன்றம் மூலம் வென்றாலும் கூட அவருக்கு அது பெரிய வெற்றியாக இருக்காது.

ஜெயலலிதா
கேள்வி: முன்னதாக 2012ல் குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.. அதன்பின் இப்போது ஓபிஎஸ் சென்றுள்ளார்.. ஓபிஎஸ்ஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறதா?
பதில்: அவர்கள் இரண்டு பக்கத்தையும் ஆதரிக்க பார்க்கிறார்கள். எடப்பாடியை டெல்லிக்கு அழைத்தனர். ஜி 20 கூட்டத்திற்கு அழைத்தனர். அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தனர். ஒரு கட்சியில் இருந்து ஒருவருக்குத்தான் அழைப்பு விடுக்க முடியும் என்பதால் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தனர். எடப்பாடிதான் இடைக்கால பொதுச்செயலாளர். பெரும்பான்மை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எடப்பாடிக்குத்தான் இருக்கிறார்கள். இதனால் எடப்பாடிக்கு அழைப்பு சென்றுள்ளது. அதே சமயம் ஓ பன்னீர்செல்வத்தை மோடி தன்னுடைய ஆளாக பார்க்கிறார். இரட்டை தலைமையைத்தான் மோடி விரும்புகிறார்.

இரட்டை தலைமை
அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கவேண்டும். அவர்களின் மீது தொங்கிக்கொண்டு எம்பி தேர்தலில் 5-6 இடங்களை வெல்லலாம் என்று பாஜக நினைக்கிறது. மோடியின் அந்த கனவில் மண்ணை அள்ளி போட்டு இருக்கிறார். ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி வெளியேற்றியதால், அடுத்த தேர்தலில் அதிமுக வாஷ் அவுட் ஆகும். இது பாஜகவிற்கு சிக்கல். இவர்கள் ஒன்றாக இருந்து, ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெல்ல முடியும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் எடப்பாடி இதற்கு அனுமதிக்கவில்லை. இது உட்கட்சி மோதல், நீங்கள் தலையிடாதீர்கள் என்று எடப்பாடி பாஜகவிடம் தெரிவிக்கிறார்.

மோதல்
இதுதான் எடப்பாடிக்கும் பாஜகவிற்கும் இருக்கும் மோதல். ஆனால் ஓ பன்னீர்செல்வமோ, அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடலாம் என்கிறார். இது கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாத வெட்கம்கெட்ட பேச்சு. ஓ பன்னீர்செல்வம் எவ்வளவு வலிமை இழந்து இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. ஒரு குடும்பத்து பிரச்சனையில் வெளிமனுஷன் தலையிடுவது எவ்வளவு மோசமானது, அவ்வளவு மோசமான நிலைப்பாட்டை ஓ பன்னீர்செல்வம் எடுத்துள்ளார். பாஜக இதில் நன்றாக குளிர்காய்கிறது. ஜி 20 கூட்டத்திற்கு எடப்பாடி, குஜராத்திற்கு ஓ பன்னீர்செல்வம் என்று பாஜக குளிர்காய்கிறது. மாறி மாறி ஆதரவு கொடுத்து பாஜக குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டும். இரண்டு பேரும் சமம் என்று பாஜக நினைக்கிறது.

இரட்டை தலைமை
கேள்வி: ஆனால் எடப்பாடி தரப்பிற்கு நெருக்கமான விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறதே? இது எடப்பாடிக்கு கொடுக்கப்படும் நெருக்கடி இல்லையா?
பதில்: எடப்பாடிக்கு நெருக்கடிதான். குறிப்பாக விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு எல்லாம் இதைத்தானே உணர்த்துகிறது. எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் எடப்பாடி மீது, அவரின் தரப்பு மீது நடவடிக்கை பாயும். வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பக்கம் பாஜக திரும்பும். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும். எங்கே தொட்டால் எடப்பாடிக்கு வலிக்குமோ அங்கெல்லாம் பாஜக தொடும். அதிமுக ஒன்றுபற்று இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதற்கு மறுத்தால் எடப்பாடி மீது கண்டிப்பாக நடவடிக்கையை பாஜக எடுக்கும் என்று பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications