பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் வரவேற்க வந்த தொண்டர்.. மோடி கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கூட பார்க்காமல் பாஜக தொண்டர் ஒருவர், நேற்று தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறார். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவித்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்பிறகு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. இதனால், நாடு முழுவதிலும் நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

அதுபோக, தனது தேர்தல் பிரசாரத்தையும் மோடி தொடங்கிவிட்டார். அந்த வகையில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் மோடி தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
சென்னையில் பாஜக கூட்டம்: அதற்கு அடுத்த நாள் தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவிலும், நெல்லையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பெசினார். இதற்கு மறுவாரமே பிரதமர் மோடி மீண்டும் நேற்று தமிழ்நாடு வந்தார். ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வந்த மோடி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி தனது உரையில், தமிழகத்தில் ஆளும் திமுகவை காட்டமாக விமர்சித்தார். பிரதமர் மோடியை வரவேற்க நூற்றுகக்ணக்கான தொண்டர்கள் சாலையில் குவிந்து இருந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகவே மோடி வந்ததால் பாஜகவினர் சாலையின் இருபுறமும் திரண்டனர்.
குழந்தைகளை பார்க்காமல் வந்த தொண்டர்: இதனிடையே, பிரதமர் மோடியை வரவேற்க அஸ்வந்த் பிஜாய் என்ற பாஜக தொண்டர் விமான நிலையத்திற்கு வந்து இருந்தார். இவரது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. எனினும் தனது குழந்தைகளின் முகத்தை கூட பார்க்காமல் மோடியை வரவேற்பதற்காக வந்து நின்றுள்ளார். இந்த தகவலை மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக மோடி கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி ட்வீட்: சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்தவர்களில் அஸ்வந்த் பிஜாய் என்ற பாஜக தொண்டரும் இருந்தார். அவர் தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அவர்களை பார்க்காமல் இங்கே வந்திருப்பதாகவும் என்னிடம் கூறினார். நீங்கள் இங்கே வந்திருக்கக்கூடாது என நான் அவரிடம் கூறினேன்.
அகமகிழ்ச்சி அடைகிறேன்: அஸ்வந்த் பிஜாய் குடும்பத்துக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்தேன். அர்ப்பணிப்பும், உறுதிப்பாடும் கொண்ட இதுபோன்ற தொண்டர்கள் பாஜகவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தொண்டர்களின் இத்தகைய அன்பையும், பாசத்தையும் பார்த்து அகமகிழ்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications