பசிக்கும்ல.. “பிசுபிசுத்த” அண்ணாமலை உண்ணாவிரதம்! ஹோட்டலில் “நைசாக” சாப்பிட்ட பாஜகவினர் -துண்டு எங்க?
பாஜகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் துண்டை கழற்றிவிட்டு உணவகத்துக்கு சாப்பிட சென்ற காட்சி வெளியாகி இருக்கிறது.
சென்னை: கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் திமுகவை சேர்ந்தவரால் கொல்லப்பட்டதை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற பாஜகவின் உண்ணாவிரத போராட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிலையில் பாஜக கொடியணிந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அதை கழற்றிவிட்டு மதிய உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனிப்பட்ட பிரச்சனையால் கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகி ஒருவர் பிரபு என்ற ராணுவ வீரரை கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தார்கள்.
இந்த சம்பவத்தை வைத்து திமுக இந்திய ராணுவத்துக்கு எதிராக செயல்படுவதாக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனை கண்டித்தும், பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி தடா பெரியசாமி வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.

உண்ணாவிரத போராட்டம்
இன்று காலை 9:30 மணியளவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டம் சென்னை சிவானந்த சாலையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 4 மணியளவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை எதிரில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி அண்ணாமலை தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி பேரணி தொடங்கியது.

உண்ணாவிரதத்துக்கு மத்தியில் சாப்பாடு
இதற்கிடையே உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் அருகே இருந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் உண்ணாவிரத போராட்டத்துக்கு மத்தியில் கேண்டீன் ஒன்றுக்கு சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

கேண்டீன் சென்ற பாஜகவினர்
உண்ணாவிரத போராட்டத்தில் வெள்ளை சட்டை அணிந்துகொண்டு கழுத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துண்டு அணிந்திருந்த அந்த நிர்வாகி, போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகே உள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று அங்கிருந்த கேண்டீனில் உணவு வாங்கிக்கொண்டு ஒரு டேபிளில் வைத்து சாப்பிடுகிறார்.

துண்டையும் காணவில்லை
அதே டேபிளில் ஏற்கனவே வெள்ளை சட்டை அணிந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த இருவருடன் அவர் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார். அந்த இருவரும்கூட உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் என்று கூறப்படுகிறது. போராட்டத்தின் போது அந்த பாஜக நிர்வாகியின் கழுத்தில் இருந்த துண்டு, சாப்பிடும்போது இல்லை. அதேபோல் அவருடன் அமர்ந்து உணவருந்திய இருவரும் துண்டு அணிந்திருக்கவில்லை.












Click it and Unblock the Notifications