ஆசிரியர்கள் ஸ்டிரைக்... ஊதியம் இல்லாமல் பணியாற்ற நாங்க தயார்... பாஜக தடாலடி
சென்னை: ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கு ஊதியமே இல்லாமல் பணிபுரிய பாஜக இளைஞர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஆணையிட்டால் பாஜக இளைஞரணியினர் மாணவர்களுக்கு பாடம் நடத்த தயார் என்று கூறியுள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தேர்வு எழுதும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழகத்தில் பல இடங்களில் 3-வது நாளாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நாளைக்குள் பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.