"அவர்" என்னுடைய அரசியல் ஆசான்.. பெருமையாக சொன்ன குஷ்பு.. டக்கென திரும்பி பார்க்கும் பாஜக
சென்னை: கருணாநிதி என்னுடைய ஆசான் என சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், ட்விட்டரில் நான் இப்போது இல்லை என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, தற்போது அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு, அதன்பிறகு சில காரணங்களால் திமுகவில் இருந்து விலகி 2014 -ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். பின்னர் திடீரென 2020 ஆம் ஆண்டு பாஜகவில் குஷ்பு இணைந்தார். தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் குஷ்பு உள்ளார்.

தனது அதிரடியான பேச்சுக்கள் மூலமாக அரசியலிலும் அவ்வப்போது கவனம் ஈர்க்ககூடியவராக இருக்கும் குஷ்பு, இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதியை தன்னுடைய அரசியல் ஆசான் என்று குறிப்பிட்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு கூறியதாவது:- கருணாநிதி என்னுடைய ஆசான் என சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவருடைய நினைவுநாள்.. காலையிலேயே நான் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டேன்.. ட்விட்டரில் நான் இப்போது இல்லை.. இன்ஸ்டகிராம் ஸ்டோரீஸில் அதைப் பற்றித்தான் நான் வைத்து இருக்கிறேன். கருணாநிதியை பற்றி பேசவேண்டும் என்றால் நாள் முழுக்க பேசுவேன் நான். ஏனெனில் நான் அங்கிருந்து வந்தவள் .. எனவே அவரைப்பற்றி நன்றாக தெரியும்.
அதற்கான நேரமும் கிடையாது. வேறு பிளாட்பார்மில் இருக்கும் அதைப்பற்றி பேசலாம்" என்றார். மேலும் குஷ்புவிடம் செய்தியாளர்கள்,சினிமாவில் இப்போது சூப்பர் ஸ்டார் யாரு... என்று செய்தியாளர்கள் குஷ்புவிடம் கேட்டனர். அதற்கு கொஞ்சம் திகைத்தபடி பதிலளித்த குஷ்பு, ரொம்ப முக்கியமா இது... நான் சூப்பர் ஸ்டார் கூட நடித்து இருக்கேன். போட்டி இருக்கனும்னு அவசியமே இல்லை..எல்லாவற்றிற்கும் கருத்து சொல்வதற்கு குஷ்பு இருக்கிறார் என்று நினைக்கக் கூடாது" என்றார்.
குஷ்பு தன்னுடைய பேட்டியில் கருணாநிதியை அரசியல் ஆசான் என்று கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், தமிழக பாஜகவை பொறுத்தவரை திமுகவை மிகக் கடுமையாக சாடி வருகிறது. குறிப்பாக அண்ணாமலை தனது பாதயாத்திரை முழுக்கவே திமுகவையும் அக்கட்சி அமைச்சர்களையும் சரமாரியாக தாக்கி பேசிவருகிறார்.
தமிழ்நாட்டு ஊழலில் நம்பர் மாநிலமாக இருப்பதாகவும் இதற்கு ஸ்டாலினே காரணம் என்றும் விமர்சனம் செய்து பேசி வருகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையின் பாத யாத்திரையில் பங்கேற்றபோதும் திமுக கடுமையாக விமர்சித்து இருந்தார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக திமுக விளங்கி வரும் நிலையில், பாஜகவின் இந்த விமர்சனம் இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியாக உள்ள மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, கருணாநிதியை தன்னுடைய அரசியல் ஆசான் என புகழ்ந்து பேசியிருப்பது பாஜக நிர்வாகிகள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தலைமையும் மாநில தலைமையும் போட்டி போட்டுக்கொண்டு திமுகவை விமர்சித்து வரும் நிலையில், பாஜகவின் பிரபலமான பிரமுகராக இருக்கும் குஷ்புவின் இந்த பேட்டி, பாஜகவினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுக்காமல் இல்லை.












Click it and Unblock the Notifications