நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விஷயத்தில்.. திமுக செய்வது வெட்கக்கேடானது! கொந்தளித்த நயினார் நாகேந்திரன்
சென்னை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்திருக்கும் உத்தரவு கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இந்த செயல் வெட்கக்கேடானது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இண்டி கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது!

இந்தக் கூட்டணியின் தலைமையான ஐ என் சி இந்தியா அவசரச் சட்டம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தையே உருக்குலைத்துப் போட்டதை இன்றும் மக்கள் கொடுங்கனவாக எண்ணி நடுங்குகிறார்கள்.
இதே கூட்டணியின் தமிழக முகமான திமுக தான் நூற்றாண்டுக் கோயில்களை இடித்தேன் என்று சொல்பவர்களை மூத்தத் தலைவர்களாகவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் 'கறுப்பர் கூட்டங்களைத்' தொண்டர்களாகவும் வைத்திருக்கிறது. ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச அறிவாலய அரசின் முயற்சியை நீதி முறியடித்தது அவர்களுக்குப் பேரிடிதான்!
அதனால்தான் இப்பொழுது அந்த நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள்-விரோத கும்பல்! இது அவர்களது அரசியல் பிழைப்பிற்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு செயலாகும். இதை தேசிய ஜனநாயக் கூட்டணி முறியடிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications