Blue moon : நீல நிலவைப் பார்க்க மறந்துடாதீங்க.. இல்லாட்டி 30 வருசம் காத்திருக்கணும்!
ஒரே மாதத்தில் இருமுறை நிகழக் கூடிய முழு நிலவு நிகழ்வான ப்ளூ மூன் நாளை நடைபெற இருக்கிறது.
சென்னை: ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் ப்ளூ மூன் எனப்படும் நிகழ்வு நாளை நடைபெற இருக்கிறது.
ப்ளூ மூன் என்றதும் நிலவு நீல நிறத்தில் தெரியுமோ என்றெல்லாம் நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். வழக்கமான முழு நிலவு நாட்களைப் போலத்தான் அதுவும் இருக்கும். அப்படியென்றால் ப்ளூ மூன் நிகழ்வுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா?
இதோ அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
ப்ளூ மூன்
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவு நிகழ்வான பௌர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை முழு நிலவு தோன்றலாம். அப்படியாக ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, இரண்டாவதாக தோன்றும் முழு நிலவை ப்ளூ மூன் அதாவது நீல நிலவு என குறிப்பிடுகிறார்கள்.
பூமியைச் சுற்றும் நிலவு
இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, நிலவு பூமியைச் சுற்றி வருகிறது என்பதை நாம் பள்ளியிலேயே படித்திருப்போம். அதன்படி நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடங்கள், 38 வினாடிகள்.
இது தான் காரணம்
எப்படி பூமி சூரியனைச் சுற்றுவதில் எடுத்துக் கொள்ளும் நேரத்தின் கூடுதலை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டில் ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோமோ அது போலத்தான் இதுவும். மாதந்தோறும் நிலவு பூமியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கூடுதல் நேரத்தைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவு நிகழ்வு தோன்றும்.
மற்றொரு சிறப்பு
இந்த நீல நிலவு நிகழ்வு தான் நாளை நடைபெற இருக்கிறது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முழு நிலவு தென்பட்டது. அதன்பிறகு நாளை (அக்டோபர் 31) முழு நிலவு வானில் தெரியப் போகிறது. நாளைய ப்ளூ மூனில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு மாதத்தில், அதாவது 30 நாட்களுக்குள் நிகழ்ந்த ப்ளூ மூன் நிகழ்வானது கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடந்தது.
30 ஆண்டுகள்
இனி இதே போன்ற ப்ளூமூன் நிகழ்வு வரும் 2050ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தான் வரும். எனவே அடுத்த ப்ளூ மூன் நிகழ்வை இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் பார்க்க முடியும். கடந்த 2018ஆம் ஆண்டு 31 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு ப்ளூ மூன்கள் தென்பட்டதாக பிடிஐ நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன. இதே போல் அடுத்த ப்ளூ மூன் வரும் ஆகஸ்ட் 31, 2023ல் நடக்கும் என்று மும்பையில் உள்ள நேரு பிளானடோரியத்தின் இயக்குநர் அரவிந்த் பரஞ்பாயே தெரிவித்துள்ளார்.