இப்ப மட்டும் வந்துட்டாரே! அண்ணா பல்கலை., வேங்கைவயல் சம்பவங்களில் சத்யராஜ் எங்கே போனார்? ப்ளூசட்டை
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம், வேங்கைவயலில் குறிப்பிட்ட சமூகத்து மக்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து சொல்லாத நடிகர் சத்யராஜ், பெரியார் விவகாரத்தில் மட்டும் கருத்து தெரிவிக்க வந்துவிட்டார் என ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேங்கை வயல், அண்ணா பல்கலை சம்பவங்கள் நடந்தபோது கட்டப்பாவை காணோம் என்று சொன்னவர்களே. இதோ வந்துவிட்டார் புரட்சித்தமிழன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதையடுத்து சீமானுக்கு எதிராக திமுக,விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் , பெரியாரிஸ்ட் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் சீமானின் கருத்து ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ப தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சீமானின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் சொல்லி உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கு.. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தான் படமுடியும். சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன.
காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார். திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் பெரியாரை ஆதரிப்பாளர்கள்.
திக, திமுக, மதிமுக, தபெதிக, திராவிட விடுதலை கழகம், அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் என்று கூறியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் மிகச்சிறந்த கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திராவிட கருத்தியலை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். தம்பி விஜய் தவெகவின் கொள்கை தலைவராக பிரகடனபடுத்தி இருக்கிறார். இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் சத்யராஜுக்கு ப்ளூ சட்டை மாறன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சத்யராஜ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அது போல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் யாரோ மனித கழிவை கலந்துவிட்ட சம்பவத்திலும் சத்யராஜ் குரல் கொடுக்கவில்லை, இப்போது பெரியாருக்கு மட்டும் வந்துவிட்டாரே என ப்ளூசட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications