அதிர்ந்த சென்னை.. கூட்டத்துக்குள் அதிவேகத்தில் புகுந்த BMW கார்! 7 பேர் படுகாயம் - சிக்கிய மலையாளி
சென்னை: விமான நிலைய பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த BMW கார் , அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ மற்றும் மக்கள் மீது மோதியதில் 7 பேர் காயமடைந்து உள்ளனர்.
சென்னையில் சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை காலை சென்னை திரும்புவது வழக்கம். அதேபோல் சென்னை புறநகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள ரிசார்ட்டுகளில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை காலை நேரங்களில் அதிவேகத்தில் கார்கள் சாலையில் பறப்பது வழக்கம். இவர்களில் சிலர் மதுபோதையுடன் கார்களை ஒட்டிச்செல்வதாலும், அதிவேகத்தில் செல்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலம் பேருந்து நிறுத்தத்தில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அந்த விமான நிலைய பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அதேபோல் அங்கு வரும் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களும் நின்றுகொண்டு இருந்தன. அப்போது அவ்வழியாக வேகமாக வந்தது BMW சொகுசுக் கார்..
கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த அந்த சிகப்பு நிற சொகுசுக் கார் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்த ஆட்டோ மீதும் பொதுமக்கள் மீதும் வேகமாக மோதியது. இதில் ஆட்டோவின் பின் பகுதியும் காரின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்தன. கட்டுப்பாட்டை இழந்து வந்த BMW கார் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் மீது அதிவேகத்தில் காரை மோதியவரை சுற்றி வளைத்த அங்கிருந்த நபர்கள், அவரை காரில் இருந்து கீழே இறக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ரஞ்சித் என்றும், கேரளாவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வார இறுதி நாட்களில் சென்னையின் முக்கிய சாலைகளில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, விபத்துகளை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications