ஆம்ஸ்ட்ராங்கை நாங்கள் ஒன்றும் செய்யலை! என் கணவர் உயிருக்கு அச்சுறுத்தல்! பாம் சரவணன் மனைவி பகீர்
சென்னை: பிரபல ரவுடி பாம் சரவணனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி மகாலட்சுமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சரவணன் நேற்றைய தினம் ஆந்திராவில் அவர் கைது செய்ததாக சொல்லப்படுகிறது. அவரை சுட்டு பிடித்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

24 மணி நேரமாகியும் இதுவரை எனக்கு துறை ரீதியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என தெரியவேண்டும்.
மேலும் அவரை எதற்காக கைது செய்தார்கள் என்பது குறித்து அறிவிக்க வேண்டும். அவர் மீது 10 ஆண்டுகளாக எந்த புதிய வழக்குகளும் இல்லை. சமூகவலைத் தளங்களில் சரவணன் குறித்து தப்புத்தப்பாக போட்டு வருகிறார்கள். போலீஸார் எதற்காக சரவணனை கார்னர் செய்கிறார்கள் என தெரியவில்லை. எனவே அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஒரு புகார் கொடுத்துள்ளேன்.
எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இரு ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறை எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்ததால் நான் என் குழந்தைகளுடன் வெளியூரில் போய் செட்டிலாகிவிட்டேன். குழந்தைகள் வெளியூரில் படிக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தேன். அப்போதுதான் சரவணனை சுட்டு பிடித்துள்ளதாக தகவல் அறிந்து காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்க வந்தேன்.
சரவணனுக்கு ஏற்கெனவே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. போலீஸார்தான் அவரது காலை உடைத்துள்ளனர். அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அது அப்படியே இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டது. அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்ததை எண்ணி நாங்கள் தினமும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். அவரை என் கணவர் கொலை செய்யும் அளவுக்கு எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை.
எதிர்தரப்பினர்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். போலீஸாரையும் தவறாக பயன்படுத்துகிறார்கள். என் கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை ஏன் கைது செய்தார்கள் என்றுகூட எங்களிடம் போலீஸார் தெரிவிக்கவே இல்லை. ஆம்ஸ்ட்ராங்கை தனது சொந்த அண்ணனாகவே சரவணன் நினைத்தார். இவ்வாறு மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட மொத்தம் 26 வழக்குகள் உள்ளன. இதுவரை இவரை 3 வழக்குகளில் பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.
அவர் தலைமறைவான நிலையில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். அந்த வகையில் பாம் சரவணனை ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டத்தில் வரதப்பாளையம் பகுதியில் துப்பாக்கி முனையில் சுட்டு பிடித்தனர்.












Click it and Unblock the Notifications