ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்!
சென்னை: ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. இதனால் ஊழியர்கள் அவசர அவசரமாக ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
சமீப காலமாக விமானங்களுக்கும், பள்ளிகளுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎன்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. பரபரப்பாக இயங்கி வரும் இந்த ஆலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஊழியர்கள் அதிகாரிகள் என பலரும் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
தமிழக காவல்துறையின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆலைக்குள் ராணுவ தளவாடங்கள் அதிகம் இருப்பதால் வெடிகுண்டு அச்சுறுத்தல் மிகவும் சீரியஸானதாக பார்க்கப்படுகிறது. எனவே மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமீப காலமாக விமானங்களுக்கும், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய அரசுக்கு கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. விமானங்கள் தாமதமாவது, விமானங்கள் ரத்து செய்யப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல தொடர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் செலவுகளும் அதிகரித்துள்ளன.
மறுபுறம் மிரட்டல் காரணமாக பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்குகின்றன. டெல்லி, பெங்களூரு தொடங்கி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும் கூட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications