சென்னை கிண்டி தனியார் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அலறிய மக்கள்.. திருச்சியிலும் பரபரப்பு!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தபோது வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு புரளியை கிளப்பிய மர்மநபரை கிண்டி போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல, திருச்சியில் 8 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. சுவேதா என்ற பெயரில் வந்த மிரட்டல் மின்னஞ்சலில் உங்கள் கல்லூரியில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டுகள் எங்கும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது.
முன்னதாக நேற்று, மதுரையில் உள்ள சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதி, காளவாசல் பகுதியில் உள்ள தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி, பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் உள்ள அமிக்கா ஆகிய 4 தங்கு விடுதிகளுக்கு நேற்று இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர் சோதனையில், இது வதந்தி என்று தெரியவந்தது. அண்மையில் மதுரையில் உள்ள நான்கு பள்ளிகளில் இதே போன்று இமெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது, அப்போதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் புரளி என்று தெரியவந்தது.
தொடர்ந்து, இமெயில் மூலமாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications