சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! நள்ளிரவில் சல்லடை போட்டு தேடிய நிபுணர்கள்!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது. கடந்த இரு வாரங்களில் 5ஆவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் இது!
தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள், விமான நிலையம் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பெற்றோரும் பக்தர்களும் பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சோதனை செய்தால் அது புரளி என தெரியவருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திற்கு கடந்த இரு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் 4 முறை வந்துள்ளது. இன்றும் கூட 5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் பேரின் வெடிகுண்டை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இதுபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வருகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இதனால், விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. வெடிகுண்டு புரளியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். இரு நாட்களுக்கு முன்னர் கூட சென்னை மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications