2 மணிக்கு வெடித்து சிதறும்! சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரத்த சென்னை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது. 2 மணிக்கு வெடித்து சிதறும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்த நபரால் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது.
சென்னையில் முக்கிய ரயில் நிலையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. தினமும் பல ஆயிரம் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் எப்போதும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.

இதனால் பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இந்நிலையில் தான் இன்று ஒரே ஒரு போன்காலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பரபரப்பானது.
அதாவது மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் 12.51 மணிக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது. இந்த வெடிகுண்டு மதியம் 2 மணிக்கு வெடிக்கும் எனக்கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாநில கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் இருப்பு பாதை போலீசார் மற்றும் பூக்கடை போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று தீவிர சோதனை செய்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
அப்போது ரயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லாததும், அது வெறும் வெடிகுண்டு புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பயணிகள் ரயில்வே அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுபற்றி விசாரிக்கப்பட்டபோது மிரட்டல் சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனியில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்த நிலையில் தற்போதும் அதே எண்ணில் இருந்து தான் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரியவந்தது.
இருப்பினும் அந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications