இந்து கோயில் ஆலோசனை குழு தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க கூடாது- முற்போக்கு பிராமண சங்கம்
சென்னை: பெரிய இந்து கோயில்களுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்க கூடாது என்று, முற்போக்கு, பிராமண சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?
இது தொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர், பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் விஜயராகவன், செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையிலுள்ள அம்சங்கள் இவைதான்-
ஆலோசனைக் குழு தலைவர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் பெரிய இந்து கோயில்களுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்று செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN HR & CE சட்டம் 10 வது பிரிவின்படி பிறப்பால் இந்துவாக இருப்பவரும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவரும், கடவுள் நம்பிக்கை கொண்டவரும் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையில் பொறுப்பேற்க முடியும் .
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஸ்டாலின்
முதலமைச்சர் தன்னை ஒரு நாத்திகர் மற்றும் இந்து கடவுள்களின் மேல் நம்பிக்கை இல்லாதவராக பகிரங்கமாக அறிவித்தவர். எனவே, தகுதி இல்லாத ஒரு நபர் தலைமையில் இந்த குழு இருப்பது சட்டவிரோதமானது.
தலைமை தாங்க வேண்டாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, முதலமைச்சர் பக்தர்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். முற்போக்கு பிராமண சங்கம் மாண்புமிகு முதலமைச்சரை ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை தாங்குவதைத் தவிர்க்குமாறு கோருகிறது.
முதல்வரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை
இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிபிரிவுக்கும். தமிழக ஆளுநருக்கும் சங்கத்தின் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.