பலுசிஸ்தான் மொழிகளில் ஒன்று 'திராவிட மொழி'க் குடும்பத்தைச் சேர்ந்த பிராகுயி- ஆச்சரியமான சரித்திரம்!
சென்னை: பாகிஸ்தான் நாட்டையே உறைய வைத்துக் கொண்டிருக்கிறது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம். பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது உக்கிரமான தாக்குதல்களை தொடர்ந்து நடத்துகிறது பலூச் ராணுவம். பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்- ஈரான் இடையேயான பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் பேசுகிற பிராகுயி என்பது நமது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்கின்றன வரலாற்றுத் தகவல்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை 'திராவிட மொழிகள்' என மொழியியலாளர்கள் வரையறை செய்துள்ளனர். இந்த திராவிட மொழிக் குடும்பத்தில் வட திராவிட மொழிகள் என பட்டியலிடப்பட்டவைகளில் பிராகுயி, மால்டோ, குரூக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மால்டோ மற்றும் குரூக் ஆகிய மொழிகள் வட இந்தியாவின் பீகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்றைக்கும் பேசப்படுகின்றன.
பிராகுயி மொழி என்பது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுகிற மொழி. பலுசிஸ்தான் மாகாணத்தின் பிராகுய்ஸ்தான் என்ற பகுதியைச் சேர்ந்த மக்கள்தான் பிராகுயி மொழியை அதிகமாக பேசுகின்றனர்; ஈரானின் பலுசிஸ்தான் பகுதியிலும் ஆப்கானிஸ்தானில் எல்லைப் பகுதிகளிலும் பிராகுயி மொழி பேசப்பட்டு வருகிறது. பொதுவாக பலூச்சி மொழிதான் பலுசிஸ்தான் முதன்மை மொழி என்றாலும் பிராகுயி மொழியும் பேசப்பட்டு வருகிறது.
திராவிட மொழிக் குடும்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாமேதை கால்டுவெல்தான், பிராகுயி மொழி பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுவதை தரவுகளுடன் நிரூபித்தார்.
தற்காலத்தில் பலுசிஸ்தானுக்கும் திராவிடத்துக்குமான நெருங்கிய உறவு தெள்ளத் தெளிவானதாகவும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இன்றைய பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் என நீண்டு கிடக்கும் பெரும் பகுதிதான் வரலாற்றின் பக்கங்களில் இன்றளவும் ஆய்வு செய்து கொண்டே இருக்கிற சிந்துசமவெளி நாகரீகம். சிந்துசமவெளி நாகரிகத்தின் மனிதர்கள்தான் தமிழர்கள். ஆதி தமிழர்கள்தான், சிந்துவெளியின் பூர்வகுடிகள் என்பதையே சிந்துசமவெளியில் கிடைத்த அத்தனை சான்றுகளும் தமிழ்நாட்டின் கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளும் ஒன்றாகவே இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
இதற்கும் மேலாக சிந்துசமவெளி ஆய்வாளரான முனைவர் பாலகிருஷ்ணன், பாகிஸ்தான் தொடங்கி ஈரான்,. ஈராக் வரையிலான ஊரின் பெயர்களையும் ஆராய்ந்தார். அந்த ஆய்வில்தான், பாகிஸ்தானில் இன்றைக்கும் காஞ்சி, கொற்கை, தோன்றி, குன்று, கோட்டை, முல்லை கோ, போர் தமிழ், சேரன், பாலை என்ற பெயரிலான ஊர்கள் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பலுசிஸ்தானின் ஒரு பகுதி மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிராகுயி மொழி பேசுவதும்; அந்த பகுதியின் நிலப் பெயர்கள் இன்றைக்கும் தமிழ் மொழியிலேயே இருப்பதும் சிந்துசமவெளியின் மக்கள்தான் ஆதி தமிழர்கள் என்பது தெள்ளத் தெளிவானதாகிறது; சிந்துசமவெளி மக்கள்தான் வட இந்தியாவில் நாகர்கள் எனப்படும் தமிழர்களாகவும் பரவி இருந்தனர்; அரசு முறை தோன்றிய காலத்தில் வட இந்திய அரசுகளுக்கும் சங்க காலத் தமிழ் அரசுகளுக்குமான தொடர்புகளை விவரிக்கும் ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் நிறைந்தே கிடக்கின்றன. அண்ணல் அம்பேத்கரும் இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், இந்தியா முழுமைக்கும் தமிழ் மொழி பேசுகிற நாகர்களே வாழ்ந்தனர் என ஆய்வுகளுடன் எழுதி இருக்கிறார். இவ்வளவு ஏன் இன்றைக்கும் தோலவீரா என்பது இந்திய வரலாற்றில் சிந்துசமவெளியின் எச்ச பகுதியாக இருக்கிறது; இதன் இருப்பிடம் குஜராத் மாநிலம்; இந்த குஜராத் மாநிலத்தின் லக்பதக் என்ற பகுதியில் ஆதி சிந்துநதி பாய்ந்தோடியது; இந்த லக்பதக்தான் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்தது என்பதை இந்திய தொல்லியல் துறையே நிறுவியும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications