தீவிரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேல்.. இன்று திருத்தணியில் உடல் அடக்கம்!
சென்னை: திருத்தணியைச் சேர்ந்த சக்திவேல், பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த திருத்தணி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேலின் உடல் இன்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தாய்நாட்டைக் காக்கும் பணியில் பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் சக்தி வேலுக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் வீர வணக்கம் செலுத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சத்திரம் ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (30). இவர், இந்திய ராணுவத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து ஜம்மு- காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில், சக்திவேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டையின்போது தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர் சக்திவேல், தீவிரவாதிகளின் எதிர் தாக்குதலில் குண்டடிபட்டு வீர மரணம் அடைந்தார்.
இந்த தகவல், இந்திய ராணுவம் சார்பில், சக்திவேல் குடும்பத்தினருக்கும், திருத்தணி காவல் நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடல் ஜம்மு, காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
சொந்த ஊரான சத்திரம் ஜெயபுரத்தில் இன்று (டிசம்பர் 6) குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வீரமரணம் அடைந்த சக்திவேலுக்கு தேவி (26) என்ற மனைவியும், ஆஷிகா செர்லின் (4), லெனின் அக்ரன் (2) என இரு குழந்தைகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications