அடம் பிடித்த காங்கிரஸை.. சத்தமின்றி பணிய வைத்த ஸ்டாலின்.. 45 நிமிட 'மேஜிக்'.. நடந்தது என்ன?
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே 'ஹாட் டாபிக்'காக இருந்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. நேற்று அறிவாலய வட்டாரத்தில் நடந்த அந்த விறுவிறுப்பான 45 நிமிட சந்திப்பு, கூட்டணிக்குள் இருந்த அத்தனை சலசலப்புகளுக்கும் 'ஃபுல் ஸ்டாப்' வைத்துள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

என்ன நடந்தது அந்த 45 நிமிடத்தில்?
டெல்லியில் இருந்து பறந்து வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். "ஆட்சியில் பங்கு வேண்டும்" என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பு முன்வைத்ததால், இரு தரப்புக்கும் இடையே ஒரு மெல்லிய உரசல் நிலவி வந்த நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், ஆரம்பத்தில் கொஞ்சம் 'டைட்' ஆக இருந்த சூழல், போகப்போக ஸ்மூத் ஆனதாகக் கூறப்படுகிறது. இறுதியில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது என்பதற்காகவும், தங்களது அதிகாரப் பகிர்வு கோரிக்கையை காங்கிரஸ் தரப்பு வாபஸ் பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
'நோ' சொன்ன ஸ்டாலின்... 'ஓகே' சொன்ன காங்கிரஸ்!
திமுக தரப்பைப் பொறுத்தவரை, ஆட்சியில் பங்கு என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் கிரிப்பாக இருந்தது. "கூட்டணி தர்மம் என்பது வேறு, அதிகாரப் பகிர்வு என்பது வேறு" என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிகத் தெளிவாக இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், கே.சி. வேணுகோபாலிடம் தற்போதைய கள எதார்த்தத்தை முதல்வர் விவரித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டது.
"இப்போதைக்கு பவர் ஷேரிங் வேண்டாம், கூட்டணியின் பலமே முக்கியம்" என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருப்பது, அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், அரசியல் நோக்கர்கள் இதனை ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்றே பார்க்கிறார்கள். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள். தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்த்து, பெரிய இலக்கை நோக்கி நகர இதுவே சரியான வழி என அறிவாலய உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.
ட்ரெண்டிங்கில் கூட்டணி பாசம்!
காங்கிரஸ் - திமுக நிர்வாகிகள் களத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு மேலிடத்தில் சண்டை போட்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.. சின்ன சின்ன வருத்தங்கள் இருந்தாலும், பெரிய விஷயத்துக்காக இறங்கி வருவதுதான் மெச்சூரிட்டி.. என அரசியல் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெளியே வந்த கே.சி. வேணுகோபால் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை தென்பட்டது. இது, அடுத்தகட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்கும் ஒரு 'கிரீன் சிக்னல்' ஆகப் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், 45 நிமிடங்களில் ஒரு பெரிய அரசியல் புயலைத் தடுத்து நிறுத்தி, கூட்டணியைக் காப்பாற்றியிருக்கிறது இந்த 'பவர் மீட்டிங்'.
காங்கிரஸ் பெரும்பாலும் பவர் ஷேரிங் கேட்காது ஆனால் முன்பை விட கூடுதலாக தொகுதிகள் கேட்கும் என்று கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications