ஆம்ஸ்ட்ராங் படுகொலை! சென்னை சென்ட்ரலில் மறியலால் டிராபிக்! பகுஜன் சமாஜ் கட்சியினர் குண்டுகட்டாக கைது
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே கட்சியினரும் ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டக்காரர்களை குண்டுகட்டாக கைது செய்து வருகிறார்கள்.
அந்த பகுதிகளில் உள்ள கடைகளும் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன. சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டருக்கே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் இரவு முதலே மருத்துவமனைக்கு குவிய தொடங்கினர். இதனால் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு உடற்கூராய்வு தொடங்கப்பட்டது.
இதையடுத்து உடற்கூராய்வு முடியும் தருவாயில் இருப்பதை அறிந்த ஆதரவாளர்கள் திடீரென நாலாப்புறமும் இருந்து ஓடி வந்து போலீஸாரின் தடுப்புகளை அகற்றிவிட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருந்தன. இதையடுத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் ஒரு வழிக்கு பாதையை விட்டுவிட்டு மற்றொரு இடத்தில் மருத்துவமனையின் வாயில் அருகே உட்கார்ந்து மறியல் செய்கிறார்கள். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூராய்வு முடிந்துவிட்டதாக தெரிகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், "படுகொலை படுகொலை பச்சை படுகொலை, தமிழக அரசே தமிழக அரசே குற்றவாளிகளை கைது செய் கைது செய்" என கோஷமிட்டனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும். அவரது உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குள்படுத்த வேண்டும். உளவுத் துறை ஏடிஜிபியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஆதரவாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனினும் உடன்படவில்லை என்றால் அவர்களை கைது செய்ய இரு பேருந்துகளை போலீஸார் வரவழைத்திருந்தனர். .இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியினரின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். இதனால் வேறு வழியின்றி ஆதரவாளர்களை போலீஸார் குண்டுகட்டாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மறியலால் அந்த பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவை மூடப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் வழக்கறிஞர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். பல்வேறு தேர்தல் விவாதங்களில் தொலைகாட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் சென்றிருந்தார்.
அவருடன் பெரம்பூரை சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு 6 பேர், 3 பைக்குகளில் வந்தனர். இதையடுத்து திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டினர். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஆம்ஸ்ட்ராங் தப்ப முடியாமல் அவர்களின் கொலை வெறிக்கு இரையானார். அந்த 6 பேரையும் வீரமணியும் பாலாஜியும் தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களையும் சேர்த்து வெட்டியது. இதில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆம்ஸ்ட்ராங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications