Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு தலைவர் பதவி? மாயாவதிக்குப் பறந்த கோரிக்கை! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியைப் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக தேசிய தலைமைக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து இவர்களைச் சிறைக்காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Armstrong BSP

மேலும் இந்தப் படுகொலை தொடர்பாக வழக்கறிஞர்கள் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை சில நாட்கள் முன்னதாக ஓட்டேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி சம்போ செந்தில் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. ஆகவே சம்போ செந்தில் என்ற செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட பலர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதியைப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தனர். மற்றொரு புறம் இந்த விவகாரம் திமுக மற்று ரஞ்சித் இடையிலான மோதலாக மாறிவருகிறது.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், 'நீதிக்கட்சி காலம் தொட்டு தலித் மக்களுக்கான உரிமையைப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அதைப் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் மட்டும்தான்' என்று பேசி இருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட உடனே அக்கட்சியின் அடுத்த தலைவராக இயக்குநர் பா.ரஞ்சித் நியமிக்கப்படலாம் என்று ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இவர் ஆரம்பக்காலம் தொட்டே ஆம்ஸ்ட்ராங் மற்றும் பிஎஸ்பி கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்ததால், இந்த மாதிரியான ஊகங்கள் வெளிவந்தன. ஆனால், இதுவரை இந்தக் கருத்தை யாரும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியில் சில அடுத்தகட்ட தலைவர்கள் இருக்கும் போது ரஞ்சித்தை அக்கட்சியின் தேசிய தலைமை முன்னிறுத்துமா? என்ற சந்தேகமும் ஒருபக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேரணியின் மூலம் தனது பலத்தை ரஞ்சித் உறுதி செய்திருப்பதால், ஒருவேளை கட்சிக்கு இவர் தலைமை தாங்கும் நிலை உருவாகலாம் என்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள். ஆனால், அப்படியான எந்த ஒரு திட்டமும் தனக்கு இல்லை என்று ரஞ்சித் மறுத்துள்ளார்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை மாநிலத் தலைவராக நியமிக்கும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் இளையராஜா தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இல்லாத ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்று இறுதி வரை உறுதியாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் 'ஜெய்பீம்' என்ற மாடல் ஒன்றை முன்வைத்துக் களமாடி வந்தார். ஆகவேதான், அவரது கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொள்ள ஆரம்பித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் நீங்கள் நரை முடியே பார்க்க முடியாது. அவ்வளவும் இளைஞர்களின் கூட்டம். இதுகூட ஆளும் அரசுக்கு அச்சுறுத்தக் கூடியதாக மாறிவிட்டதோ என்று இப்போது சந்தேகப்படுகிறோம். கடந்த 17 ஆண்டுகளாக அவர் தலைவராக இருக்கிறார். சென்னையில் ஒரு தலித் தலைவராக உருவெடுக்கிறார் என்பதற்காகக் கூட அவர் கொல்லப்பட்டிருக்கலாம்" என்று பேசியுள்ளார்.

Armstrong BSP

மேலும் ரஞ்சி கட்சியின் தலைவராக வருவாரா என்ற கேள்விக்கு, "ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சி மீது ஒரு பற்று கொண்டவர். அதைத்தாண்டி ஆம்ஸ்ட்ராங் மீது பாசம் கொண்டவர். இருவருக்கும் குடும்ப ரீதியாக உறவு உண்டு. ரஞ்சித் படிக்கப் பண உதவிகளைச் செய்தவர் ஆம்ஸ்ட்ராங். இன்று ரஞ்சித் பேசினால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகப் போடுகிறார்கள். அதைப் பல முறை ஆம்ஸ்ட்ராங் அண்ணனே சுட்டிக்காட்டிப் பாராட்டி இருக்கிறார். நம் சமூகத்திலிருந்து ஒருவர் மேலே உயர்ந்து வந்துள்ளார் எனப் பல முறை பேசி இருக்கிறார்.

இன்று தனது சொந்த சகோதரரை இழந்து தவிப்பதைப்போன்றுதான் ரஞ்சித் துடித்து வருகிறார். அதற்காக அவர் நீதி விசாரணை கேட்கிறார். அவர் பிஎஸ்பி தலைவராக வரவேண்டும் என்று கட்சியில் உள்ளவர்கள் யாரும் சொல்லவில்லை. அவரும் கட்சியில் பதவி வேண்டும் என்று கேட்கவில்லை. யூகத்தின் அடிப்படையில் சிலர் அப்படிப் பேசுகிறார்கள்.

சில நாட்கள் முன்னதாக மாநில செயற்குழு கூடியது. அதில் தேசிய தலைமையிலிருந்து சில தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர். அப்போது தற்காலிக ஒருங்கிணைப்பாளராக கோபிநாத்தை நியமித்துள்ளார்கள். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியைக் கட்சிக்குத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்தது உண்மை. விவாதிக்கப்பட்டதும் உண்மை. அதை அண்ணி பொற்கொடியின் ஒப்புதல் இல்லாமல் நாங்களே முன்வைத்தோம். ஆம்ஸ்ட்ராங் என்ற ஒரு அடையாளம் எங்களுக்குத் தேவை என்று சொன்னோம். அதைக் கேட்டுக் கொண்ட தேசிய பொறுப்பாளர்கள் மாயாவதியின் கவனத்திற்கு இந்தத் தகவலை எடுத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ஆனால், அண்ணி பொற்கொடி அந்தத் தலைமையை ஏற்பாரா என்பதே சந்தேகம்தான். அவர் உள்ள மனநிலை அப்படி. வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+