சம்பளத்தை கூட்டிருவேன்னு மேனேஜர் மிரட்டுறார்.. வருமான வரி ரூல்சை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கட்ட வேண்டியது இல்லை. நிலையான கழிவு 75 ஆயிரம் போக அதற்கு மேல் வருமானம் ஈட்டினால் கிட்டதட்ட 70 ஆயிரம் வரி கட்ட வேண்டிய நிலை வரும். இதனை வைத்து நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில் வருமான வரியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது புதிய வரிவிதிப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமானவரி கிடையாது. அதேநேரம் 12 லட்சத்துடன் நிலையான வரிக்கழிவு 75 ஆயிரம் வரும் என்பதால் 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரியில்லை ஆனால், அதன்பிறகு வெறும் ஆயிரம் கூடுதலாக வாங்கினாலே ரூ. 71,400 வரி கட்ட வேண்டியிருக்கும். 12 லட்சத்து 75 ஆயிரத்தை தாண்டி ஆயிரம் ரூபாய் கூடுதலாக வாங்கினாலே வரியாக கிட்டத்தட்ட 70 ஆயிரம் வரிகட்ட வேண்டிய நிலைக்கு வருவார்கள்.
ஊழியர்கள் அச்சம்
வெறும் 25 ஆயிரம் கூடுதாலாக சம்பளம் வாங்குவோர் 75 ஆயிரம் வரி கட்ட வேண்டியதிருக்கும். ஆயிரம் கூட வாங்கினாலே சுமார் 70 ஆயிரம் வரி கட்ட வேண்டியிருக்கும் நிலை இருப்பதால், இதை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் நையாண்டியாக மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், 11.80 லட்சம் ஆண்டுக்கு வருமானம் ஈட்டும் ஊழியர் ஒருவரை மிரட்டுவதற்காக, சம்பளத்தை உயர்த்தி விடுவேன் என மேனேஜர் மிரட்டுவதாக பதிவிட்டு இருக்கிறார். அதேபோல, ஏப்ரல் மாத அப்ரைசல் மீட்டிங்கில் பலரும் தங்களுக்கு 12 லட்சத்திற்கு மேல் சம்பளம் போய்விடுமோ என ஊழியர்கள் அச்சப்படுவதாகவும் மற்றொரு நெட்டிசன் பதிவிட்டு இருக்கிறார்.
12 லட்சத்துக்கு குறைவாக வாங்கினால் சந்தோஷம்
மற்றொறு மீம்ஸ் ஒன்றில் ஒரே நபர் மகிழ்ச்சியுடனும், கடும் அப்செட்டிலும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், 12 லட்சம் வரையிலான தொகைக்கு வரி கிடையாது என்பதால் மகிழ்ச்சியுடனும், இதற்கு மேல் சம்பளம் கூடிவிட்டால் வரி கட்ட வேண்டியிருக்கும் என்பதால் அதிருப்தியுடன் இருப்பதாக கேப்ஷனுடன் பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு மீமில் தீபிகா படுகோனே படம் ஒன்றில் கவலை தோய்ந்த முகத்துடன் தனது குடும்பத்தினரோடு அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “13.5 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குபவர்கள் தற்போது 12 லட்சம் சம்பளம் வாங்குபவர்களை விட கவலையுடன் இருப்பார்கள் என பொருள் படும் வகையில் மீம்ஸை பதிவிட்டு இருக்கிறார்.
12 லட்சத்துக்கு கீழ் சம்பளம் போதும்
மற்றொரு மீம்ஸில் 12 லட்சம் வரையில் வரி கிடையாது என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அதேவேளையில் ஏப்ரல் மாத சம்பள உயர்வுக்கு பிறகு சம்பளம் கூடிவிடும் என்பதால் அதிர்ச்சி அடைவதாகவும் கூறி ஒரே நபரின் இருவேறு படங்களை பகிர்ந்துள்ளனர். அதேபோல மற்றொரு மீம்ஸில் ஹெச்.ஆர், உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்ட போது இண்டர்வியூவிற்கு வந்த நபர் 12 லட்சத்திற்கு கீழ் போதும் என கேட்பதாக மீம்ஸ் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications