பைப்ல தண்ணி வரலைனா கூட திமுக தான் காரணமா? தவெகவின் புகார்.. பஸ் பஞ்சாயத்துக்கு யார் பொறுப்பு?
சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினமே சென்னையில் இருந்து கிளம்பிய பலரும் மாலை வரை சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இளைஞர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு அவர்களை செல்ல விடாமல் திமுக சதி செய்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகளை பார்க்க முடிந்தது. உண்மையில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் தான் போக்குவரத்து வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்கின்றனர் முன்னாள் போக்குவரத்து ஊழியர்கள்.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்றது. 11 மணிக்கு எல்லாம் 32 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலரும் தங்கள் வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.
2026 சட்டசபை தேர்தல்
நேரம் செல்ல செல்ல பெரும்பாலும் வாக்கு பதிவு நிறைவடைந்தது போலவே இருந்தது. தேர்தல் ஆணையத்தின் கணக்குகளின் படி இது இதுவரை இல்லாத 85 வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் இது ஒன்றும் பெரிய அளவில் இல்லை. அதே நேரத்தில் கடந்த முறையை விட இந்த முறை பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க தீவிரம் காட்டினர்.
பேருந்து பற்றாக்குறை
குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து பேருந்துகள் விமானம் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு பேருந்து நிலையங்களை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கிளாம்பாக்கம் நேற்று முன்தினம் இரவு முழுக்க முழுக்க பயணிகள் கூட்டத்தால் நிறைந்திருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நெரிசல்
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் பேருந்துகள் பற்றாக்குறையால் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். சிலர் செங்கல்பட்டை தாண்டுவதற்கே காலை 7 மணி ஆகிவிட்டது என புலம்பினர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் கிடைக்காததால் விழுப்புரம், திருச்சி, மதுரை என பேருந்துகள் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பலரும் மாலை தான் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிந்ததாக சமூக வலைதளங்களில் புகார் கூறினர்.
திமுக மீது குற்றச்சாட்டு
மேலும் இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டு போடுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சதி செய்வதாகவும் திமுக விஜய்யை பார்த்து அஞ்சுவதால் தான் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசிய போது," தேர்தல் அறிவித்து விட்டாலே எந்த துறையையும் முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது. கொள்கை ரீதியான முடிவுகளையும் எடுக்க முடியாது.
யார் பொறுப்பு?
சில இடங்களில் அதிகாரிகள் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேர்தான் தலைமைச் செயலர், காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அப்படி பார்க்கும்போது போக்குவரத்து துறையும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் போக்குவரத்து துறை செயலாளர் இருந்தால் ஒரு வேலை திட்டமிட்டு குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டது என்றால் அது தேர்தல் ஆணையத்தின் தவறுதான் திமுகவின் தவறு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications