ED வளையத்தில் ரத்தீஷ்.. "யார் இந்த தம்பி" என நெருக்கும் அதிமுக.. முக்கிய புள்ளியின் பினாமியா?
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில் தொழிலதிபரான ரத்தீஷ் என்பவரின் பெயர் அடிபட்டு வருகிறது. தமிழக அரசியல் புள்ளி ஒருவரின் பினாமி எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிமுக கேள்விகளை எழுப்பி வருகிறது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

டாஸ்மாக் முறைகேடு புகார்
இந்தச் சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
விசாகனிடம் விசாரணை
இந்தச் சோதனையின்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீட்டின் அருகே கிழிந்த நிலையில் கிடந்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். விசாகனை அமலாக்கத் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ஐந்து மணி நேரமாக விசாகனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் மையப்புள்ளியாக ரத்தீஷ் என்ற தொழிலதிபர் பெயர் அடிபட்டு வருகிறது. இவர் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, அவரது வீட்டின் பின்புறத்தில் சில வாட்ஸ் அப் சாட் ஸ்கிரீன்ஷாட் பக்கங்கள் சில சிதறி கிடந்ததை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் ரத்தீஷ் உடன் விசாகன் மேற்கொண்ட வாட்ஸ் அப் உரையாடல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரத்தீஷ்
இதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ரத்தீஷின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை வருவதை அறிந்த அவர் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. அவரை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ரத்தீஷ், அரசியல் பிரமுகர் ஒருவரின் பினாமி என்றும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று கேள்வி எழுப்பிய அதிமுக, "துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா? ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம், So, Sketch உதயநிதிக்கா? யார் இந்த தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன" எனவும் கேள்வி எழுப்பி இருந்தது.
யார் இந்த தம்பி?
இந்நிலையில் இன்று மீண்டும் அதிமுக, "முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தாலும், அதிகாரிகளாலும், துணை முதல்வர் உதயநிதியாலும் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்படும் இந்த ரத்தீஷ் யார்? ரத்தீஷ் துபாய் நாட்டிற்கு தப்பிவிட்டார் என செய்திகள் வருகிறது.
ரத்தீஷ் வீட்டை ED அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வீட்டை ED சீல் வைக்கும் அளவிற்கு, துபாய் தப்பி செல்லும் அளவிற்கு, இதுவரை மக்களுக்கு யாரென்றே தெரியாத ரத்தீஷ் பின்னால் உள்ள திமுகவின் உண்மை முகம் என்ன? யார் அந்த தம்பி? 1,000 கோடி டாஸ்மாக் ஊழல் என்பது, ரத்தீஷ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் 1,76,000,00,00,000 ரூபாய் தாண்டி இமயமலை ஊழலாகும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறதே.
Are we witnessing a Scam larger than DMK's previous scams? இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு பெரிய ஊழலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதைப் பார்த்தால் மக்களுக்கு எழக்கூடிய ஒரே கேள்வி யார் அந்த தம்பி? இந்த கேள்வியைக் கேட்டால் திமுகவின் சுயரூபம் வெளியே வரும் என்கிறார்கள். தொடர்ந்து கேட்போம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications