அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக் குழு நிராகரிக்கிறது.. நிராகரிக்கிறது! சிவி சண்முகம் ஆவேசம்
சென்னை: அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக் குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு சென்னை வானகரத்தில் கூடியது. பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த துருப்பு சீட்டுடன் இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னதாகவே ஓபிஎஸ் வந்தடைந்தார். அவரை அதிமுக செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்கள் வெளியே செல்லுமாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடக்கொடுமையே! உங்க சண்டையில் எம்ஜிஆர், ஜெ. சமாதியை மறந்துட்டீங்களே..அதிமுக தொண்டர்கள் ஆதங்கம்!
துரோகி என கோஷம்
அவரது வாகனத்தையே உள்ளே விடாமல் துரோகி என தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் திருமண மண்டபத்தில் ஒரு அறையில் தங்கியிருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவருக்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி
இதையடுத்து முதலில் எடப்பாடி பழனிச்சாமி மேடைக்கு வந்தார். பிறகு ஓபிஎஸ் மேடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை வெளியே செல்லுமாறு கூச்சலிட்டனர். இதையடுத்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய அழைத்தார்.
23 தீர்மானங்கள்
அதன்படி ஓபிஎஸ் பேசுகையில் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய 23 தீர்மானங்களையும் முன்மொழிவதாக அறிவித்தார். அண்ணன் ஓபிஎஸ் முன்மொழிந்ததை தான் வழிமொழிவதாக பழனிச்சாமி அறிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் இந்த தீர்மானத்தை ஏற்குமாறு வைகைச்செல்வன் அழைத்தார்.
சிவி சண்முகம் ஆவேசம்
இதையடுத்து சிவி சண்முகம், அனைத்து பொதுக் குழு தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார். அவரை தொடர்ந்து கே பி முனுசாமியும் ஆவேசமாக பேசினார். அவர் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்கள் வேறு ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என முனுசாமி தெரிவித்தார்.
வரவேற்பு
ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற சென்னை ஹைகோர்ட் இன்று அதிகாலை தடையுத்தரவு பிறப்பித்தது. எனவே பிற தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி ஆதரவாளரான சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார். இதை கூட்டத்தினர் ஆரவாரித்து வரவேற்றனர்.