ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? ஆனாலும் அதிருப்தி!
சென்னை: தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ரூ 2,028.57 கோடியை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த போனஸ் மூலம் 11.72 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இவர்கள் சுமார் 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நவம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அது போல் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியா மட்டுமில்லாமல் வடஇந்தியாவிலும் இந்த தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த இரு பண்டிகைகளை முன்னிட்டுத்தான் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனஸ் ரயில்வே துறையில் பணியாற்றும் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றால், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், நிலைய அதிகாரிகள் (ஸ்டேஷன் மாஸ்டர்கள்), சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்.
இந்த போனஸ் தொகையானது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஊழியருக்கு ரூ 17,951 வரை அதிகபட்சமாக போனஸ் கிடைக்கும். இது அவரவரது அடிப்படை ஊதியத்திலிருந்து மாறுபடும். இந்த போனஸ் குறித்த மகிழ்ச்சியான செய்தியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் ரயில்வே துறையினருக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போது வழங்கப்படும் போனஸ் 6ஆவது ஊதிய குழு பரிந்துரையில் வழங்கப்படுகிறது. ஆனால் தங்களுக்கு 7ஆவது ஊதிய குழு பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு போனஸ் வழங்க வேண்டும் என சமூகவலைதளங்களில் ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ரயில்வே தொழிற்சங்கங்களும் வலியுறுத்துகின்றன. இத குறித்து ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் 6ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் எங்களுக்கு போனஸ் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 7 ஆயிரம் இருக்கும் ஒரு தொழிலாளருக்கு ரூ 17,951 போனஸாக கிடைக்கும்.
இதே 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், ஒவ்வொரு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ 18 ஆயிரம் இருக்கும். இதை வைத்து கணக்கிட்டால் போனஸ் தொகை ரூ 46,159 கிடைக்கும். இந்த தொகை எங்கே இருக்கிறது, வெறும் ரூ 17,951 எங்கே இருக்கிறது?
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கால் நாடே முடங்கி கிடந்த நிலையிலும் ரயில்வே ஊழியர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்து முடித்தனர். இதை கருத்தில் கொண்டாவது அவர்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும். போனஸும் அந்த ஊதியக் குழு பரிந்துரையை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த போனஸ் தொகையை மறுபரிலீசனை செய்யுமாறு தொழிற்சங்கத்தினர், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்விற்கு , இரு வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் அதற்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை. ரயில்வே பணியின் சவால்களை எதிர் கொண்டாலும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் ரயில்வே பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட போனஸை வழங்கினால், அவர்களுக்கு அது ஊக்கமளிக்கும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications