பேச முடியாது.. சோர்வாக நடந்து வந்த செந்தில் பாலாஜி.. வரும்போது லிஃப்ட்.. போகும்போது படிக்கட்டு!
சென்னை: இன்று அமலாக்கத்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி வரும் போது லிஃப்ட் ஏறி வந்தார். திரும்பிச் செல்லும்போது படிக்கட்டு வழியாக இறங்கி நடந்து சென்றார். அப்போது மிகுந்த சோர்வாக காணப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்து வந்த நிலையில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது.

செந்தில் பாலாஜியிடம் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி நிர்மலாவின் பெயரில் உள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார், அவரது மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோர் ஆஜராகவில்லை என்பதால் சொத்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை இன்று நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறையினர் துன்புறுத்தினார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, இல்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. 120 பக்கங்களை கொண்ட அந்த குற்றப்பத்திரிகையுடன் 3000த்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றப் பத்திரிக்கையில் முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அவரது சகோதரர் அசோக் குமார் உட்பட வேறு யாருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

பின்னர், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறையினர் தங்கள் காரில் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்கு நீதிபதி முன்பாக ஆஜராக வரும்போது லிஃப்ட் ஏறி வந்தார் செந்தில் பாலாஜி. அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் லிஃப்ட்டிலேயே சென்றனர். வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு திரும்பிச் செல்லும்போது படிக்கட்டில் இறங்கி கீழே நடந்து சென்றார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கையை அசைத்தபடி சோர்வாக நடந்து சென்றார் செந்தில் பாலாஜி. நீதிமன்ற காவலில் இருப்பதால் எதுவும் பேச முடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பரணிதரன் அப்போது விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications