நாளை மறுநாள் தேர்தல்.. நாளையுடன் ஓய்கிறது பிரச்சாரம்! இன்று தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று முக்கியமான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் சீராகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, தேர்தல் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தேர்தல் ஆணையம்
இந்த கூட்டத்தில் மாநிலத்தின் தமிழகத்தின் அங்கீகரிகப்பட்ட அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், தேர்தல் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்வதாகும்.
முக்கிய ஆலோசனை
குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது. குடிநீர், நிழற்குடை, கழிப்பறை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை சரியாக உள்ளதா என்பதை தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளிடம் விளக்க உள்ளனர். அதே சமயம், கட்சிகள் சார்பில் எழும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் நேரடியாக தெரிவிக்க இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
வாக்குச்சாவடிகள்
மேலும், மாநிலம் முழுவதும் பதற்றமானதாக கருதப்படும் வாக்குச்சாவடிகள் குறித்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதும் இந்த கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் காலங்களில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
அனைத்து கட்சி
பொதுமக்கள் எளிதாக வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அனைத்து கட்சித் தலைவர்களும் மற்றும் வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் பெரிய பொதுக் கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆலோசனை கூட்டம்
கூட்டணி கட்சித் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு முன் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் தேர்தல் ஏற்பாடுகளை இறுதி கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நாள் அன்று வாக்குப் பதிவு எந்த தடங்கலும் இல்லாமல் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக சொல்கின்றனர் தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications