பிரசார கூட்டங்களா? கொரோனா உற்பத்தி கூடங்களா? அரசியல்வாதிகளே..! கொரோனா தடுப்பு விதிமுறைகள் எங்கே!
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவதால் கொரோனா மீண்டும் அபாய நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல்.. 22 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் எந்த மாற்றமும் இல்லை!
Recommended Video
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. 100 டிகிரி, 102 டிகிரியில் சுட்டெரிக்கும் வெயிலை விட அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொத்து, கொத்தாக கூட்டம்
தற்போது தமிழ்நாட்டில் எந்த ஒரு மூலைக்கு சென்றாலும் குறைந்தது ஒரு அரசியல் தலைவரையும், அவர்களை சுற்றி கொத்து, கொத்ததாக கூட்டம் குழுமி இருப்பதையும் உங்களால் பார்க்க முடியும்.
இவ்வாறு தேர்தல் களம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, நாம் மறந்து விட்ட பொதுவான ஒரு எதிரியும் தமிழகம் முழுவதும் பம்பரத்தை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? நம்மை 10 மாதங்கள் பாடாய்படுத்தி விட்டு, தற்போது மீண்டும் பாடாய் படுத்துவதற்காக வலுவாக உருமாறி வரும் கொரோனா தொற்றுதான் அந்த பொது எதிரி.
மக்கள் பட்டபாடு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் 8, 9 மாதங்கள் வரை கொரோனாவால் மக்கள் பட்ட கஷ்டங்களை வெறும் வார்த்தையால் எழுதி விட முடியாது. அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு கொரோனா கொடுத்த அடி என்றுமே அவ்வளவு எளிதில் அகலாது. கொரோனா கொடுத்த அடியை, நினைவில் வைத்திருக்கும் நாம், கொரோனா தடுப்பு வழிமுறைகளை சுத்தமாக மறந்ததுதான் பெரும் சோகம்.
மாஸ்க் எங்கே?
இதன் விளைவுதான் தற்போது கொரோனா மீண்டும் கம்பீரமாக வலம் வருவதற்கு காரணம். சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 500-க்குள் அடங்கி இருந்தது. ஆனால் இன்று 1,250-ஐ தொட்டு அடங்காமல் நிற்கிறது. பொது இடங்களில் செல்லும்போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது போன்ற வழிமுறைகளை பலர் மறந்ததுதான் இந்த நிலைமைக்கு காரணம்.
பொறுப்பு துறக்கும் அரசியல்வாதிகள்
அபராதம், கண்டிப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம் மக்களை திருத்தி விடலாம். ஆனால் இதனை மக்களிடம் எடுத்து சொல்லாமல், அதே தவறுகளை செய்யும் அரசியல்வாதிகளை யார் திருத்துவது? ஆம்.. தற்போது மக்களை விட அதிகம் தப்பு செய்வது அரசியல்வாதிகள்தான். பொறுப்புடன் நடக்க வேண்டிய ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, மத்தியில் ஆளும் பாஜக, பெரிய கட்சியான காங்கிரஸ் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும் கொரோனா தடுப்பு விதிகளை கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
பெருங்கூட்டத்தால் அச்சம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் தொடங்கி முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்யும்போது ஆயிரம், பல்லாயிரம் கணக்கில் பெருங்கூட்டம் கூடி விடுகிறது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூடும்போது, இதில் மாஸ்க் அணிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பல இடங்களில் முக்கிய தலைவர்களே மாஸ்க் அணிவதில்லை. அவர்களை சுற்றி இருப்பவர்களும் மாஸ்க் என்றால் என்ன? என்று கேட்பது போல் நடமாடுகின்றனர். பிரசாரத்தின்போது மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் அரசியல்வாதிகள் மக்களிடம், மாஸ்க் அணிந்துதான் பிரசாரத்திற்கு வர வேண்டும் என்று கூற முன்வரவில்லை.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை
நமது அண்டை மாநிலமான கேரளாவில் குறைந்திருந்த கொரோனா, ஓணம் பண்டிகையை கொண்டாட மக்களை அனுமதித்த பிறகுதான் மீண்டும் அதிகரித்தது. தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு இடங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து கூடுகிற கூட்டங்களை பார்க்கும்போது வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ம் தேதி கொரோனா பாதிப்பு 10,000 எண்ணிக்கையை தொட்டு விடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
நிலைமை என்னவாகும்
ஒரு பக்கம் கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசியை செலுத்தி விட்டு, மற்றோரு புறம் இதுபோல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத பிரசார கூட்டங்களை அரசியல்வாதிகள் நடத்தும்போது எதிர்கால நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கவலையில்லாத அரசியல்வாதிகள்
ஆனால் இதையெல்லாம் நினைத்து அரசியல்வாதிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தின் பிரதான கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், '' தேர்தல் காலங்களில் எங்களால் கூட்டத்தைத் தவிர்க்க முடியாது. கூட்டத்தில் பலர் முகமூடி அணிய மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது தேர்தல் காலம் என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது'' என்று பொறுப்பில்லாமல் சர்வசாதாரணமாக கூறுகிறார்.
திருந்துங்கள் அரசியல்வாதிகளே
ஆகவே தற்போது திருந்த வேண்டியது அரசியல்வாதிகள்தான். கோடிக்கணக்கான மக்களின் நலன் கருதி பிரசார கூட்டங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. இது பொறுப்பு மட்டுமல்ல; அவர்களின் கடமையும் கூட..!