"பச்சோந்தி?".. பாயிண்ட்டை பிடித்து திடீரென "சீன்" போடும் தலைவர்கள்.. விரக்தியா? பயமா? பரிதாப "அம்மா"
வைத்திலிங்கம் எதற்காக திடீரென கொடநாடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறார்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், கொடநாடு விவகாரம் குறித்து, அதிமுகவின் சீனியர்கள் திடீரென குரல் எழுப்பி உள்ளனர்.. இதற்கு என்ன காரணம்?
மேத்யூ தன்னுடைய வாக்குமூலத்தில், "அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் எங்கெல்லாம், எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றவே முதல்வர் எடப்பாடி இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார்..
அந்த ஆவணங்களை வைத்துக்கொண்டே ஓபிஎஸ் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களையும் கைக்குள் வைத்திருக்கிறார்" என்று கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மேத்யூ சொன்ன இந்த வார்த்தைகள் அதிமுகவில் அளவுக்கு அதிகமான பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி முதல்வராக இருந்தபோது, கொடநாடு கேஸ் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது, ஒருவித தற்காலிக தீர்வை பெற்று தந்தது.. மக்களாலும் இந்த கேஸ் மறக்கப்பட்டது. பிரச்சாரத்தில் சொல்லியது போலவே மீண்டும் திமுக ஆட்சி வந்ததுமே, இந்த வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டது.. ஜெ.மரணத்தை மட்டுமே திமுக தோண்டி எடுக்கும் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில், கொடநாடு பக்கம் யூடர்ன் போட்டது எதிர்பாராத ட்விஸ்ட் ஆகும்.

வாக்குமூலம்
சயான் அன்று வாக்குமூலம் தந்ததும், எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஒரு யூகத்தில்தான் சேர்க்கப்பட்டதாக சொன்னார்கள்.. அதனால்தான், அன்றே, சட்டமன்றத்துக்கு வெளியே ஓடிவந்து, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் என் பெயரை சேர்த்துவிட முயற்சி நடக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.. எப்படியும், கொடநாடு கேஸில் தன்னை இணைத்து விடுவார்கள் என்ற பயத்தினாலேயே, ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளதாகவும், அந்த பதவியை வைத்து தன்னை கட்சியில் முன்னிறுத்தி, கொடநாடு விவகாரத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுவதாகவும், ஒருசாரார் சொல்லி வருகிறார்கள்.

எடப்பாடி பிளான்
எனினும், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி சம்பந்தப்பட்டிருக்கிறாரா? இல்லையா? என்பதை நீதிமன்றமும், சட்டமும் பார்த்து கொள்ளும் என்றாலும், இத்தனை காலமும் எடப்பாடி பழனிசாமியுடன் எந்நேரமும் கட்சிக்குள்ளேயே கம்மென்று இருந்தவர்கள், டக்கென எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளதுதான் இன்றைய கடைந்தெடுத்த பச்சோந்தித்தனமாக பார்க்கப்படுகிறது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மருது உள்ளிட்டோர் திடீரென கொடநாடு பற்றி பேசுகிறார்கள்.. கொடநாடு பற்றி விசாரிக்க சொல்கிறார்கள்.. கொடநாடு கேஸை மீடியாவில் சொல்லி, எடப்பாடிக்கு கலக்கத்தை தர துவங்கி உள்ளனர்.. இன்றைய தினம், சுப்ரீம்கோர்ட் வரை சென்றும், நடக்க போகும் பொதுக்குழுவை நிறுத்த முடியாமல் போய்விட்டதே என்ற விரக்தியிலும், கலக்கத்திலும், கொடநாடு கேஸை புதிதாக கிளப்பி விட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது..

வைத்திலிங்கம் பரபரப்பு
அதிலும், வைத்திலிங்கம் கட்சியின் சீனியர்.. அமைச்சராக இருந்தவர்... அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்.. ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவும்கூட.. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர்.. ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர்தான் வைத்திலிங்கம்.

பங்களா
அப்படி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட வைத்திலிங்கம், அதே ஜெயலலிதாவின் பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தபோது, என்ன செய்தார்? இத்தனை காலம் என்ன செய்தார்? எடப்பாடி பழனிசாமி அரசிலும் தன்னுடைய பதவி, பொறுப்பை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டிருந்த வைத்திலிங்கம், இன்று எதற்காக எடப்பாடிக்கு எதிராக திரும்புகிறார்? என்ற யதார்த்த கேள்வியும் பரவலாக இயல்பாகவே எழுகிறது..

பழனிசாமி
இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது.. பொதுவாக, எடப்பாடி பழனிசாமியுடன் ஏழாம் பொருத்தமாக இருப்பவர் வைத்திலிங்கம்.. ஆரம்பத்தில் இருந்தே தன்னை எடப்பாடி ஒதுக்கி வைத்துவிட்டதாக, அதிருப்தியில் இருப்பவர் என்றும், எந்நேரம் வேண்டுமானாலும் இவர் சசிகலா பக்கம் தாவுவார் என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி மீதான தன் ஆதங்கத்தை இந்த கொடநாடு வழக்கை முன்வைத்து, வைத்திலிங்கம் திசைதிருப்பி விடப்படுவதாகவே கருதப்படுகிறதாம்.

ஞாபகம் வருகிறது
இப்போது என்றில்லை, சசிகலாவிற்கு எதிராக அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் நடந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று திடீரென கோரிக்கை வைத்தார். அவரோடு சேர்ந்து ஒரு குரூப் இப்படித்தான் கோரிக்கையை வைத்தார்கள்.. பிரச்சனையை திசை திருப்பினார்கள்.. ஆனால் ஜெயலலிதா மறைந்து அத்தனை நாட்களாக இவர்கள் வாயே திறக்காமல் இருந்தனர். அதேபோல, இன்று எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் என்று வந்ததும், கொடநாடு பற்றி விசாரிக்க கேட்கிறார்கள்.. அதாவது, ஒரு பிரச்சினை வந்த பிறகுதான் ஜெ. மரணம் பற்றியும், ஜெ.வின் கொடநாடு பற்றியும், இந்த தலைவர்களுக்கு ஞாபகமே வருகிறது... நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுகிறார்கள்.
Recommended Video

சந்தர்ப்பவாதம்
இவர்களாவது பரவாயில்லை, சந்தர்ப்பம் வந்தால் பேசுகிறார்கள்.. ஆனால் எந்நேரமும் கூடவே இருக்கும்போது ஓபிஎஸ் இது எதை பற்றியும் வாயே திறப்பதில்லை... தன் ஆதரவாளர்களை விட்டு பேசவைத்தாலும், ஓபிஎஸ்ஸின் அரசியல், பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றே தெரிகிறது. எப்படி பார்த்தாலும், இதெல்லாம் கடைந்தெடுத்த "சந்தர்ப்பவாதம்" என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை..!












Click it and Unblock the Notifications