தர்ம யுத்தம் 2.0 நடக்க வாய்ப்பே இல்லை.. டெல்லி மேலிடம் தந்த ஆதரவு.. மாறிய அதிமுக நிலவரம்
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக 7ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கோபம் கொண்டு தர்ம யுத்தம் 2.0 நடத்துவாரா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லையாம். ஏனெனில் டெல்லி பாஜக மேலிட ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கே கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் நிசப்தமான சூழல் நிலவுகிறது. எதையும் யாரும் அக்டோபர் 7ம் தேதிக்கு முன்பு சொல்லக்கூடாது என்று வாய் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 7ம் தேதி தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டால், சந்தேகமே வேண்டாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று சொல்கிறார்கள்.

அதிகாரம் பெற விரும்புவார்
தர்ம யுத்தம் போட்டு கடந்த முறை அதிக எம்பி மற்றும் 10 எம்எல்ஏக்களை ஈர்த்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்த முறை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டால், தர்ம யுத்தம் 2.0 நடத்துவாரா என்றால் நிச்சயம் மாட்டார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். ஏனெனில் கட்சியில் அவர் ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய பொறுப்பில் இருக்கிறார். எனவே அவருக்கான அதிகாரத்தை பெற முயற்சிப்பாரே தவிர கட்சியை உடைத்துக்கொண்டோ, மோதலை உருவாக்கி கொண்டோ ஒரு காலத்திலும் செல்ல வாய்ப்பு இல்லையாம்.

யாரும் வாய் திறக்கவில்லை
கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய 99 சதவீதம் பேரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த வேண்டும் என்றே குரல் எழுப்பி இருக்கிறார்களாம். ஒரு சிலர் தவிர அனைருமே இபிஎஸ்ஸுக்கு ஆதரவு குரல் எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. போதாதகுறைக்கு, அமைச்சர் உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் வெளிப்படையாகவே இதை சொன்னார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அதை பற்றி வாய் திறக்க மறுத்துவிட்டனர்.

உறுதுணையாக இருந்த அமைச்சர்கள்
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலரையும், தனது தீவிர ஆதரவாளர்களாக மாற்றுவதில், அதிகாரத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமார்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆரம்பம் முதலே ஆதரித்து இன்று வரை அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். அத்துடன் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்து கட்சியை ஒற்றுமையாக வழிநடத்தவும் உதவி வருகிறார்கள். இவர்களின் உதவி, முதல்வரின் சமார்த்தியமான வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

சட்டமன்ற இடைத்தேர்தல்
எல்லாவற்றுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்களை சந்தித்தார். ஏராளமான போராட்டங்களை சந்தித்தார். அதை எல்லாவற்றையும் முறியடித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டிருக்கிறார். 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடியாரின் செயல்பாடு நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கூட்டணியை உருவாக்கி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி தொடர்வதை உறுதி செய்தார்.

அதிமுக தொண்டர்கள் ஆதரவு
இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் தலைவராக உருமாறிவிட்டார். 4வருட அதிகாரம் எடப்பாடிக்கு அதிமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் பெரும் செல்வாக்கை உருவாக்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்துடன் பாஜக டெல்லி மேலிடத்திலும் நல்ல பெயர் கிடைத்தது. பிரதமர் மோடியே, எடப்பாடி பழனிசாமியின் கொரோனா தடுப்பு பணிகளை பாராட்டினார். இந்நிலையில் ஆட்சியில் தொடர எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தினகரனை தூக்கி எறிந்தார்
இதுமட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்கெடுப்பில் வாக்களித்த விஷயத்தில் , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 11 பேரையும் காப்பாற்றியது எடப்பாடி தான். இதேபோல் தினகரன் கட்சியில் இருந்து பிரிந்த போது, அவரை ஒரே நாளில் தூக்கி எறிந்தார். அத்துடன் கட்சிக்கும், ஆட்சிக்கும் கொடுக்கப்படும் அழுத்தத்தை சமாளித்து பல தடைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை எடப்பாடி, நடத்தி வருவதால் அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துவிட்டார். எனவே அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நட்பு பாராட்டி செல்வார்
இதற்கு எதிராக ஒ பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் 2.0 தொடங்க வாய்ப்பு இல்லை. அவர் கட்சியில் வழக்கம் போல் உயர்ந்த பொறுப்பை வகிப்பார். அத்துடன் தற்போது உள்ள நிலையே தொடரும் என்று தெரிகிறது. கட்சி ஒற்றுமையாக செயல்பட ஓ பன்னீர்செல்வம் எடப்பாடியுடன் நட்பு பாராட்டி செல்வார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications