அதிமுக கொடியோட வந்தா.. எடப்பாடி டீம் ‘வார்னிங்’.. ஓபிஎஸ் பிளான் என்ன? அடடே.. அதே மாதிரியா? ரைட்டு!
சென்னை : தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன். ஓபிஎஸ் அணியினரின் திட்டம் என்ன?
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. இதனையடுத்து பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஈபிஎஸ்.

அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்தக் காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது.
ஈபிஎஸ் அணியினர் எச்சரிக்கை : எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் அது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ், சசிகலா என யாரும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடியோட வரட்டும் : ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவின் கொடியை இனிமேல் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் அதிமுகவின் பெயரை சொல்லி ஓபிஎஸ் அமர முடியாது. நாளை முதல் ஓபிஎஸ் அவரது காரில் அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு வந்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்தார் அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன்.
இதனால், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட முப்பெரும் விழா மாநாட்டை ஓபிஎஸ் எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சி பெயர், கொடியை பயன்படுத்தாமல் ஓபிஎஸ் தரப்பால் மாநாட்டை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

வழக்குகள் நிலுவையை காரணம் காட்டி : தேர்தல் ஆணையத்தின் முடிவு நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை மேற்கோள் காட்டி அதிமுக கொடி, சின்னம், கட்சியின் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னும் சசிகலா அதிமுக, சின்னம், கொடி போன்றவற்றைப் பயன்படுத்தியது போல வழக்குகளை மேற்கோள் காட்டி ஓபிஎஸ் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
பண்ருட்டியார் பளிச் : அதிமுக பெயரையோ, சின்னம், கொடியையோ ஓபிஎஸ் பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதிலளித்த ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால் நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications