சல்லி சல்லியா புகையுதே.. பாஜகவின் "தாயம் ஒன்னு".. கிளைமேக்ஸ் வருது.. அதிமுகவில் மாற்றம்? அப்ப திமுக?
சென்னை: திமுக அமைச்சர் ரகுபதி கொளுத்தி போட்ட விவகாரம், அதிமுகவில் இன்னமும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
கடந்த 2 வருடங்களாகவே, அதிமுகவில் புகைச்சல் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.. இரட்டை தலைமை விவகாரம் ஓரளவு முடிவுக்கு வந்து, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு வெளியேற்றிய பிறகும், இந்த புகைச்சல் அடங்கவில்லை. பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட பிறகும்கூட, இந்த புகைச்சல் அடங்கவில்லை..

இதற்கெல்லாம் காரணம், அதிமுகவுக்குள்ளேயே இரண்டு விதமான டீம் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, எடப்பாடிக்கு ஆதரவான டீம், மற்றொன்று பாஜகவுக்கு விசுவாசமான டீம்.
2 டீம்: சிவி சண்முகம், ஜெயக்குமார், போன்றவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களாக கருதப்படும் நிலையில், எஸ்பி வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எல்லாம் பாஜகவுக்கு விசுவாசிகளாக இருப்பதாக எப்போதுமே ஒரு மறைமுகபேச்சு உண்டு.
அதனால்தான், கூட்டணியிலிருந்து பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்ட நிலையில், வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பாஜக பக்கம் தாவ இருப்பதாக, கடந்த ஒரு வருட காலமாகவே செய்திகள் கசிந்தவாறே உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பேயே, இவர்களை தங்கள் பக்கம் கொண்டுவர, கொங்கு மண்டல பாஜக பிரமுகர் முயற்சித்ததாகவும் சொன்னார்கள்.
அதற்கேற்றவாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "விஜயதாரணி அக்காவை போலவே, அதிமுகவிலிருந்து மேலும் சில தலைவர்கள் பாஜகவுக்கு வருவார்கள்" என்று சொல்லவும், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலுமணி: ஆனால், கடைசிவரை அதிமுகவை விட்டு யாருமே பாஜக பக்கம் போகவில்லை, முக்கியமாக, வேலுமணி, தங்கமணி இவர்கள் யாருமே, எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்பட்டு, லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தையும் தீவிரமாக முன்னெடுத்திருந்தார்கள். எனவே, கட்சி தாவல் பரபரப்புகள தேர்தலுடன் அடங்கிவிட்டது.
இந்த சூழலில்தான், திடீரென செங்கோட்டையன் பாஜகவுக்கு போகபோவதாக ஒரு செய்தி கிளம்பியது.. மாநில தலைமை பதவியை தந்தால் பாஜக பொறுப்பை ஏற்பதாக அதிமுக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் சொன்னாராம்.
அனல்: இப்படி ஒரு செய்தி கிளம்பியதுமே, இதற்கு மறுப்பு சொன்னார் செங்கோட்டையன்.. ஆனாலும், திமுக அமைச்சர் ரகுபதியின் பேட்டியானது, மீண்டும் அனலை அள்ளி கொட்டியது.
அதில், "தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும்.. அதிமுகவில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.. அதனை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்" என்று கூறியிருந்தார்.
செங்கோட்டையன் மறுப்பு: ரகுபதியின் இந்த பேச்சுக்கும், நேற்றுமுன்தினம் செங்கோட்டையன் மறுப்பு சொல்லி, விளக்கம் தந்திருந்தார்.. ஆனாலும், அதிமுகவுக்குள் இந்த சர்ச்சை அடங்கவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, "சொன்னால் நம்புங்க.. நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த மாட்டேன்" என்பது போல் தெரிவித்துள்ளார்.. அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாகவும் வேலுமணி அதில் பதிவிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி: எனினும், அதிமுகவில் இது தொடர்பான சலசலப்பு அடங்கவில்லை.. இதற்கெல்லாம் காரணம், கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கொண்டாடியபோது, பலரும் திரண்டு சென்று வாழ்த்து சொன்னார்கள். ஆனால், வேலுமணி செல்லவில்லையாம். கோவையில் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டிருந்ததாம்.
அதுவும் இல்லாமல், சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார்களாம் செங்கோட்டையனும், வேலுமணியும்..!
மகிழ்ச்சி: காரணம் அதிமுக மேலும் பிளவுபட்டால், அரசியல் களம் முழுவதுமாக திமுகவுக்கே சாதகமாகிவிடும் என்பதால், ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவர 2 மூத்த தலைவர்களும் முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..
ஒருவேளை, அதிமுகவை ஒன்றிணைக்க வேலுமணி + செங்கோட்டையன் இருவரும் முயற்சிப்பது உண்மையானால், அது தங்களுக்கு மகிழ்ச்சியே என்று அதிமுக தொண்டர்களும் பூரித்து சொல்கிறார்களாம்.
இதைத்தான் அமைச்சர் ரகுபதி, தன்னுடைய பேட்டியின்போது, செங்கோட்டையன் + வேலுமணியின் பெயரை குறிப்பிட்டே வெளிப்படையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
என்ன காரணம்: ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. செங்கோட்டையனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார்.. எஸ்.பி. வேலுமணியும் இந்த குற்றச்சாட்டை மறுத்து தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்கிறார்.. ஆனாலும், அதிமுகவில் புகைந்து கொண்டே இருக்கிறதாம்.. என்னவா இருக்கும்??
இந்த முறை தேர்தலில் பாஜக தனித்து களம் கண்டுள்ளது என்றாலும், பிரதான வெற்றியை பெறுமா என்று தெரியவில்லை.. அதேசமயம், வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளிலும் இப்போதே இறங்கி உள்ளது.
பாஜக ரூட்: எனவே, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்படுமானால், ஒருங்கிணைந்த அதிமுக அவசியம் என்பதை பாஜக ஏற்கனவே உணர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதிலும் உறுதியாக இருந்தது. அதனால்தான், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு, ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்ற அவசியத்தை பலமுறை அதிமுக தலைவர்களிடம் பாஜக மேலிடம் வலியுறுத்தியே வந்தது.
கடைசிவரை இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்த நிலையில், பாஜகவின் அதே விருப்பத்தை, தற்போது அதிமுக சீனியர்களே கையில் எடுத்துள்ளதாக கூறப்படுவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது...!!












Click it and Unblock the Notifications