சாட்டையடி.. அறிவியல்பூர்வமான ஆய்வு எங்கே? செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பிடாதவர் யார்? ஹைகோர்ட்டு சுளீர்
சென்னை: தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்திகொண்டிருக்கும், மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த வழக்கு ஒன்று சென்னை ஹைகோர்ட்டில் நடந்துள்ளது.. இதுகுறித்து நீதிபதிகள் தந்த உத்தரவு என்ன?
இந்தியாவை பொறுத்தவரை, பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது.. உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, செயற்கை ஊட்டமேற்றிய உணவில் தீவிரம் காட்டி வருகிறது மத்திய அரசு. இதற்காகவே, செறிவூட்டப்பட்ட அரிசியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. அந்தவகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி மாவு: செறிவூட்டப்பட்ட அரிசி என்பது, அரிசியை மாவாக அரைத்து, இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் B 12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.. பிறகு, அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோவுக்கு, 1 கிலோ என்ற விகிதத்தில் புழுங்கல், பச்சரிசியுடன் கலந்து வழங்கப்படுகிறது..
ஆனாலும், தானியங்களில் இரும்புச்சத்தை செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பைக் கணிசமாக அதிகரிக்க செய்யும் என்றும், ஹீமோகுளோபின் அளவினையும் இது உயர்த்தாது, குடலில் நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரிய தொற்று ஏற்படலாம், உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் வரலாம், உயர் ரத்த அழுத்தமும் தாக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கசிந்தவாறே உள்ளன.
மத்திய அரசு: இதனிடையே, மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில், "செறிவூட்டப்பட்ட அரிசியை, தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது" என்ற விழிப்புணர்வு வாசகத்தை, அந்த அரிசி உள்ள சாக்கு பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் சில ரேஷன் கடைகளில், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.. அதேபோல, பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின்கீழும், இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க போவதாக சொல்கிறார்கள்.
உடல்நலம் பாதிப்பு: இப்படிப்பட்ட சூழலில், செறிவூட்டப்பட்ட அரிசி, உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது, உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கடலூரை சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதுபோலவே, தலசீமியா, அமீனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை மருத்துவர்கள் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அரிசி பையில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
விளம்பர பலகைகள்: இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தலசீமியா, அமீனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படியே செறிவூட்டப்பட்ட அரிசி உண்ண வேண்டும் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்ய வேண்டிய அவசியம் இல்லை என விளக்கம் தந்தார்..
ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, எந்தவொரு அறிவியல் ஆய்வும் நடத்தாமல், அரிசி வாங்கக்கூடிய திட்டமானது செயல்படுத்தப்படுகிறது... இதுகுறித்த முறையான ஆய்வு எதவும் நடத்தப்படவில்லை என்ற தகவல் நாடாளுமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று வாதிட்டார்.
ஒத்திவைப்பு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்போகிறீர்கள்? அரிசியை சாப்பிடக்கூடாதவர்களை எப்படி கண்காணிக்க போகிறீர்கள்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜுன் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications