திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும்? காங். பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் சொன்னது இதுதான்
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறினார்.
லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார். கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு பங்கேற்க உள்ளது. திமுகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் போட்டியிடும் விருப்பமான தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகள் போட்டியிட்ட நிலையில், அந்த 9 தொகுதிகள் மற்றும் இந்த முறை போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் அளித்து பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும் என்பதை இப்போதே சொல்ல முடியாது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார். பீகார் அரசியல் நிலவரம் குறித்து பேசிய முகுல் வாஸ்னிக், "அங்கு என்ன நடைபெற்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications