விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் எதைக் காட்டுகிறது? கொடையுள்ளம் கொண்ட ''தென்னவன்''!
சென்னை: கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மழை வெள்ளத்தால் தத்தளித்த சென்னை மாநகரை, இன்று மக்கள் வெள்ளத்தால் தத்தளிக்க வைத்துவிட்டார் கேப்டன் விஜயகாந்த்.
வங்கக்கடல் ஓரம் விஜயகாந்தை அடக்கம் செய்ய வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் கோரிக்கை வைத்த நிலையில், கோயம்பேட்டை நோக்கி மனிதக்கடலே புகுந்து விட்டதை போல் கட்டுங்கடங்காத கூட்டத்தை காண முடிந்தது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, போன்றோருக்கு எந்தளவுக்கு கூட்டம் திரண்டதோ அதற்கு சிறிதும் குறையாமல் விஜயகாந்துக்கும் கூட்டம் திரண்டிருந்தது தான் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

விஜயகாந்த் உயிரோடு இருந்தவரை அவரை என்னவோ என்று நினைத்தவர்கள் எல்லாம் இன்று அவருக்காக திரண்டு வந்த மக்கள் கடலை பார்த்து வியந்துபோய் விட்டனர். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பதை விஜயகாந்த் நிரூபித்திருக்கிறார்.
இதனிடையே விஜயகாந்த் இத்தனைக்கும் முதலமைச்சராக கூட இருந்ததில்லை, அதேபோல் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து முழுமையாக ஒதுங்கி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதேபோல் தான் சினிமா படங்களில் நடித்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அப்படியிருந்தும் விஜயகாந்துக்காக இந்தளவு கூட்டம் திரண்டிருக்கிறது என்றால் அவர் மக்கள் மனங்களில் எந்தளவு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதை யாரும் சொல்லி தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை. விஜயகாந்தின் கொடையுள்ளத்திற்காக கூடிய கூட்டமே தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
இதில் மிக மிக முக்கியமாக கூர்ந்து கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களில் 80% பேர் சாமானிய தொண்டர்கள். அவர்களிடம் காரோ, பெரியளவில் காசு பணமோ கிடையாது. இன்றைய அரசியல் சூழலில், ஆதாயமின்றி அப்பழுக்கற்ற அன்புக்காக விஜயகாந்துக்கு இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சாலையின் இரு மருங்கிலும் மக்கள் சாரை சாரையாக திரண்டு மலர்கள் தூவி தங்கத் தமிழ்நாட்டின் தென்னவன் விஜயகாந்துக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்ததை காண முடிந்தது. காவல்துறையினருடன் மதியம் லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் விஜயகாந்த் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று தேமுதிக தொண்டர்கள் அமைதி காத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications