ஐகோர்ட் தீர்ப்பால் பாலகிருஷ்ணா ரெட்டி ஹேப்பி, மனைவிக்காக பிரச்சாரம் செய்ய தடையில்லை
சென்னை: ஓசூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக, குற்றவழக்கில் தண்டனை பெற்ற அவரது கணவர் பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓசூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இத்துடன் அமைச்சர் பதவியையும் இழந்தார்.
இந்நிலையில் காலியாக உள்ள ஓசூர் தொகுதிக்கும் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

தண்டனை பெற்றவர்
இந்நிலையில் ஒசூர் தொகுதியில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம் செய்கிறார்
இதனால் அவர் தன்னுடைய அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். தற்போது பதவி இழந்த அதே ஒசூர் தொகுதியில் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்கிறார்.

பிரச்சாரம் செய்யக்கூடாது
குற்றவழக்கில் சிறை தண்டணை பெற்ற முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவே அவர் தேர்தல பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

அவசர வழக்கு
இந்த வழக்கு நேற்று அவசர வழக்காக நீதிபதிகள் எஸ் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என அறிவித்துள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ, தேர்தல் நடத்தை விதியிலோ, தண்டனை பெற்றவர் பிரச்சாரம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் பாலகிருஷ்ணா ரெட்டி மகிழ்ச்சியில் உள்ளார்.












Click it and Unblock the Notifications