எடப்பாடிக்கு பெரிய சிக்கல்! பொதுச்செயலாளராக தேர்வானதற்கு எதிராக புதிய வழக்கு.. அடுத்து என்ன
சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ்- எடப்பாடி இடையேயான உட்கட்சி பூசல் தொடர்ந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், இரட்டை தலைமையில் இயங்கினாலும் பெரிய வெற்றியை அதிமுகவால் பெற முடியவில்லை.
தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்து வந்தது. அப்போதே ஓபிஎஸ்- எடப்பாடி இடையே பூசல் நிலவி வந்ததாகச் சொல்லப்பட்டது.
சொத்து வரி உயர்வுதான் திமுக அரசு கொடுத்த போனஸ்.. ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய எடப்பாடி பழனிசாமி!
அதிமுக
இதற்கிடையே கடந்த மே மாதம் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று வெளிப்படையாகவே பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரு அணிகளாகச் செயல்படத் தொடங்கின. பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி
அப்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் எடப்பாடிக்குச் சாதகமான தீர்பையே வழங்கி உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்டில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல அதிமுக அலுவலக சாவி வழக்கிலும் ஓபிஎஸுக்கு சாதமாக முடிவு கிடைக்கவில்லை.
கட்சி அலுவலகம்
இதற்கிடையே பொதுக்குழுக் கூட்டம் நடந்த பிறகு முதல்முறையாக எடப்பாடி சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று இருந்தார். ஜூலை மாதம் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற போது, அங்கு அடிதடி ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி கட்சி ஆபீசுக்கு சென்றது இதுவே முதல்முறை. அப்போது ஒரு சில மூத்த நிர்வாகிகளைத் தவிர அனைவரும் ஆஜராகினர்.
பொதுச்செயலாளர் தேர்வு
இப்படி நடந்தது எல்லாமே எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை சாதகமாக இருந்து வந்துள்ளது. இதனால் எடப்பாடி செம குஷியில் உள்ளார். தற்போது அவர் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில், விரைவில் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது கட்சிக்குள் அவருக்கு முக்கிய மெலேஜ் கொடுக்கும்.
அதிர்ச்சி
இதற்கு இடையே ஓபிஎஸுக்கு அதிர்ச்சி தரும் வகையில், நேற்றைய தினம் ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவர் இல்லாமல் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஜக்கையன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இது ஓபிஎசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
வழக்கு
இந்தச் சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரிய மூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இந்த வழக்கைச் சூரிய மூர்த்தி தொடர்ந்து இருக்கிறார்.
தேர்வுக்கு எதிராக
பொதுக்குழுவை எதிர்த்த மனு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என மனுவில் சூர்யகுமார் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.