கோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு
சென்னை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி வழங்க்கோரிய மனுவிற்கு தமிழக அரசு, அறநிலையத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி டிசம்பர் 10 முதல் 12 வரை மகா தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்ற பக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி பக்தர்களை அழைத்து செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாக பக்தர்களை அழைத்து சென்று வருவதாக கூறியுள்ளார்.
2015 முதல் வனத்துறை அனுமதி பெற்று கோவிலுக்கு சென்றுவரும் நிலையில் இந்த ஆண்டு மகாதீபம் ஏற்றவும், பூஜைகள் செய்யவும் அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 20ல் அரசுக்கு அனுப்பிய மனுவில் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு வழக்கு குறித்து தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13க்கு ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications