கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம்.. பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!
சென்னை: கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி உள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.

நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் இயக்குனரே சமூக வலைத்தளத்தில் இந்த புகாரை வைத்து இருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

'எங்களுக்கு நீதி வேண்டும்'
பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்திய மாணவிகள் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அறிவித்தனர். இதனால், கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்ற ஒற்றை கோஷத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தை கைவிடுவதாக
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டை தாமாக முன்வந்து கையில் எடுத்த மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். சுமார் 5 மணி நேரம் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ் குமரி, போராட்டத்தை நிறுத்திவிட்டு, விடுதிக்கு சென்று படியுங்கள். இந்த அரசு நிச்சயம் நல்ல தீர்வை கொடுக்கும் என்று சொன்னேன். அவர்களும் போராட்டத்தை கைவிட்டு திரும்புவதாக கூறினார்கள்" என்றார்.

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இதனிடையே, கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் கடந்த 2 தினங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications