சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போ இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில் அரசை விமர்சித்த எதிர்கட்சிகள், பத்திரிகைகள் மீது நூற்று ஐம்பதுக்கும் மேல் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளை வாபஸ் பெற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது முறையே கடந்த 2014 மற்றும் 2018ல் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான மனுவை அரசாணையுடன் மாநகர அரசு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி செல்வகுமார், வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications