அரசியல் உள்நோக்கத்தோடு கார்னர் பண்றாங்க.. வழக்குகளை ரத்து செய்ய வேலுமணி மனு.. கோர்ட்டில் பரபர வாதம்!
சென்னை : அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆட்சியின்போது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!
வேலுமணி மனு தாக்கல்
இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததை அடுத்து எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது, விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஆதாரமில்லை
புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் எஸ்.பி.வேலுமணி தரப்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தனி நீதிபதி முன்பாகத்தான்
அப்போது அரசு தரப்பில், ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமென்றும்,
இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு உகந்தல்ல என்றும் வாதிடப்பட்டது.
அரசியல் உள்நோக்கத்துடன்
வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகாரில் முகாந்திரம் இல்லை என்கிற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும், தணிக்கை குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.