வருகை பதிவேட்டில் ஜாதிப்பெயர்..? சர்ச்சையில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி..!
சென்னை: சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் ஜாதிப்பெயருடன் மாணவர்களின் வருகை பதிவேடு பின்பற்றப்படுவதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இது போன்ற நடைமுறையை பின்பற்றக்கூடாது முழுமையாக கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் ஒரு சில பள்ளிகளில் இந்த அவலம் நீடிக்கிறது.

இதனிடையே இது தொடர்பாக இந்து ஆங்கில நாளிதழின் செய்தியாளர் டென்னிஸ் ஜேசுதாசன் நடத்திய கள ஆய்வில், சாதிய அடிப்படையில் தாங்கள் மாணவர்களை பிரிக்கவில்லை என சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்திருக்கிறார். நிர்வாக காரணத்திற்காக மட்டுமே மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் ஜாதிப்பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் இது மாணவர்களுக்கு எந்த நிலையிலும் தெரியாது எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் தங்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது எனக் கூறியிருக்கிறார். செய்தியாளரிடம் அவர் காண்பித்த வருகைப்பதிவேட்டில், SC(A), SC(O), BC-HINDU, BC-CHRISTIAN, BC-MUSLIM, OC, என்ற வரிசையில் மாணவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது தெரிய வருகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளி துணை இயக்குநர் ஸ்நேகாவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்தில், எல்லா பள்ளிகளிலும் அகர வரிசைப்படி மட்டுமே மாணவர்கள் பெயரை வருகைப்பதிவேட்டில் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் இது நடைமுறையில் கிடையாதே எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காக செய்தியாளர் டென்னிஸ் ஜேசுதாசனுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தவறிருப்பின் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளார்.
இதனிடையே சமூக செயற்பாட்டாளர் கோபாலகிருஷ்ணன் இது குறித்து தெரிவிக்கையில், உரிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இப்படி நடக்கிறது என்றால் கண்களுக்கு எட்டாத கிராமப்புறப் பகுதிகளில் நடப்பதை கற்பனைக்கு எட்டாதது எனக் கூறியிருக்கிறார்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சாதிக்கு எதிராகவும் சாதிவெறிக்கு எதிராகவும் தான் பாடம் நடத்த வேண்டுமே தவிர அவர்கள் ஒரு போதும் சாதியை நினைவுப்படுத்தும் பணியில் ஈடுபடக் கூடாது என சமூக செயற்பாட்டாளர் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளியில் நடந்த இந்த நிகழ்வு எதேச்சையாக நடந்ததோ அல்லது உள்நோக்கத்துடன் நடந்ததோ தவறு தவறு தான் என்றும் இதனை சகித்துக்கொள்ள இயலாது எனவும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications