"அது மட்டன் இல்லை பூனைக்கறி.." சென்னையில் ஹோட்டல்களில் நடக்கும் பகீர்! வேட்டையாடப்படும் பூனைகள்
சென்னை: தலைநகர் சென்னையில் மட்டனுடன் இணைந்து மிக்ஸ் செய்து பூனைக்கறியும் விற்பனை செய்யப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்னைல் டெலிவரி என்பது கிட்டத்தட்ட தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. டெலிவரி செய்தால் வீடுகளுக்கே உணவு வந்துவிடுவதால் பலரும் டெலிவரி மூலம் ஹோட்டல் உணவுகளை உண்கிறார்கள்.
இதன் காரணமாக இளைஞர்கள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் போக்கு அதிகரித்தே வருகிறது. ஆனால், இதுபோல அதிகமாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவதால் இளைஞர்களுக்குப் பல விதமான உடல்நிலை பாதிப்பும் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

சென்னை
குறிப்பாகச் சென்னையில் இதுபோல வெளியே சாப்பிடும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. சில காலத்திற்கு முன்பு வரை, மட்டன் விலை அதிகம் என்பதால் அத்துடன் வேறு விலங்குகளின் மாமிசத்தை கலப்பதாகப் புகார்கள் வந்து கொண்டு இருந்தன. இதைத் தடுக்க அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதுபோன்ற புகார்கள் சில காலமாகத் தான் குறைந்திருந்தன. இதனிடையே இப்போது மீண்டும் அதுபோல ஒரு குற்றச்சாட்டுச் சென்னையில் கிளம்பியுள்ளது.

பூனைகள்
சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்ட் அருகே சிலர் பூனைகளைப் பிடித்து வலையில் அடைத்து வைத்திருந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சவுகார்பேட்டை விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி இது குறித்து ஏழுகிணறு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்குச் சென்று பூனைகளை வைத்திருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 11 பூனைகளைத் திருவள்ளூரில் இயங்கி வரும் விலங்கு நலப் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

பூனைக்கறி
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது பல வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படும் பூனைகளை உரிமையாளர்களுக்கு தெரியாமல் வலை வைத்து பிடிப்பதே இந்த இருவரின் வேலை.. பூனைகளைப் பிடிக்கும் இவர்கள், அதைக் கொன்று தோலை உரித்து மட்டன் இறைச்சியுடன் கலந்து விற்றுவிடுவார்களாம். அதிகாலை நேரத்தில் அவர்கள் பூனைகளை உரிமையாளர்களுக்குத் தெரியாமல் பிடித்து வந்ததும் அம்பலமானது. இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

ஹோட்டல்கள்
அயனாவரம், சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு இவர்கள் பூனை இறைச்சியை விற்றுள்ளனர். அதேபோல பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையிலும் இவர்கள் பூனை இறைச்சியை அதிகம் விற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வாங்கும் பூனை கறியை மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி
பூனை இறைச்சியும் மட்டன் கறியும் கிட்டத்தட்ட ஒரே பதத்தில் இருப்பதால் மட்டனுடன் பூனை இறைச்சியை மிக்ஸ் செய்யும் போது, அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், இதேபோல சென்னையில் பல்லாவரத்தில் பூனை கறி விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அங்குப் பல பூனைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. சாலையோர வியாபாரிகளுக்கு அது விற்பனை செய்யப்பட்டது. இப்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்தல்
இப்போது வெயில் காலம் நெருங்கும் நிலையில், பலரும் சிக்கன் சூடு என்பதால் மட்டனையே சாப்பிட விரும்புகிறார்கள். வெளியே செல்லும்போதும் மட்டனையே சாப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில் இப்படி பூனை இறைச்சியும் மட்டனும் கலப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது உரிய நடவடிக்கையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications