பரங்கிமலை மாணவி கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே போன் பண்ணுங்க!
சென்னை : பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியா ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யப்பிரியா ஒருதலைக் காதலால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்ட நிலையில், கடந்த 15ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம் என சிபிசிஐடி போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலையிலிருந்து பிறந்தார்கள் என புராணத்தை நம்புவோர், நயன்தாரா குழந்தையை ஆய்வு செய்வது ஏன்?: வன்னியரசு
அதிரவைத்த கொலை சம்பவம்
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞன் கடந்த 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தான். இதையடுத்து சதீஷை கைது செய்த ரயில்வே போலீசார், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையை கடந்த 15-ஆம் தேதி தொடங்கினர்.
சிபிசிஐடி போலீசார் விசாரணை
சிபிசிஐடி போலீசார், கொலை சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் பணியாற்றிய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ரயில் ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்றது.
நேரில் பார்த்தவர்களிடம்
மேலும், மாணவியின் தாயாரான தலைமைக் காவலர் ராமலட்சுமி, அவரது குடும்பத்தினர், மாணவியின் தோழிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தனியார் தொலைக்காட்சிகள், யூடியூப்சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தனர். அவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிபிசிஐடி அறிவிப்பு
சிறையில் உள்ள சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தீபாவளி முடிந்த பிறகு விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம் என சிபிசிஐடி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அளிக்கலாம்
விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் - 9498142494 , காவல் ஆய்வாளர் ரம்யா - 9498104698 மற்றும் சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை - 044-28513500 ஆகியோரை இந்த எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அளிக்கலாம் என்றும் சிபிசிஐடி அறிவித்துள்ளது.