சென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு
சென்னை: சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ஆடிட்டோரியத்திற்கு முறைகேடாக செலவீனம் செய்ததாக பிரபல பரதநாட்டியம் நடனக் கலைஞரும், சங்கீத நாடக அகாடமி முன்னாள் தலைவருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், வெளியான ஓகே கண்மணி திரைப்படம் பார்த்திருந்தால் உங்களுக்கு சட்டென இவர் முகம் நினைவுக்கு வரும். பிரகாஷ் ராஜ் கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருப்பாரே அவர்தான் லீலா சாம்சன்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர் இவர், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சென்சார்) முன்னாள் தலைவராகும் லீலா சாம்சன். இவருடன், அறக்கட்டளையின் அப்போதைய அதிகாரிகள் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தலைமை கணக்கு அலுவலர் டி.எஸ்.மூர்த்தி, கணக்கு அலுவலர் எஸ்.ராமச்சந்திரன், பொறியியல் அதிகாரி வி.சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
பொது நிதி விதிகளை மீறி ஆடிட்டோரிய புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அறக்கட்டளையின் அதிகாரிகள் வழங்கியதாக கலாச்சார அமைச்சக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி சிபிஐக்கு அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.
2005 மே 06 முதல், 2012ம் ஆண்டுக்கு இடையில் லீலா சாம்சன் அறக்கட்டளையின் இயக்குநராக பதவி வகித்தார். 1985 ஆம் ஆண்டில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையால் ஆடிட்டோரியம் கட்டப்பட்டிருந்தது. அதை புதுப்பிக்க வேண்டும் என்று 2006ல் முடிவு செய்யப்பட்டது.
கூத்தம்பலம் என்று அழைக்கப்படும், இந்த ஆடிட்டோரியத்தின் ஒலி அமைப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கம். சிவில் இன்ஜினியரிங் பணிகள், மின் பணிகள், ஏர் கண்டிஷனிங் மற்றும் கட்டடக்கலை அம்சங்கள் போன்றவையும் புனரமைக்கப்பட்டன.
சிவில் பணிக்குழு 2010 ஆம் ஆண்டில் CARD என்ற நிறுவனத்தை கட்டிட கன்சல்டன்ட்டாக நியமித்தது. இது புதுப்பித்தல் பணிகளுக்கான ஒப்பந்தங்களை ஐந்து ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கியது, அதே நேரத்தில் குழு சில ஒப்பந்தக்காரர்களையும் தேர்ந்தெடுத்தது. ஆனால், ஒப்பந்தங்களை வழங்குவதில் திறந்த டெண்டர் செயல்முறை பின்பற்றப்படவில்லை.
ரூ.7.02 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, 62.20 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இதுமுறைகேடு என்ற சந்தேகத்தின் பேரில், சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications