டெல்லிக்கு இனி கூப்பிடாதீங்க.. சிபிஐ, ஓய்வு பெற்ற நீதிபதிக்கு விஜய்யிடம் இருந்து பறந்த கடிதம்.. காரணம் என்ன?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. விஜய்யிடம் 3 முறை சிபிஐ நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், டெல்லியில் விசாரணை நடத்துவதற்கு பதிலாக சென்னையிலேயே விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐக்கு விஜய் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கரூர் வழக்கு விசாரணையை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் இந்த கடிதத்தை விஜய் எழுதியுள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் வழக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டதில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்தவர்கள் உயிரிழந்து கிடந்த நிலையிலும் விஜய் அன்றைய தினமே சென்னைக்கு புறப்பட்டார்.
சிபிஐ விசாரணை
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை செய்து வருகிறது. ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விஜய்யும் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சிபிஐ முன்பு நேரில் ஆஜர் ஆனார். அதற்கு பிறகு பொங்கல் கழித்து மீண்டும் டெல்லியில் விஜய் ஆஜர் ஆனார்.
இதனை தொடர்ந்து மீண்டும் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி அவர் நேற்று டெல்லியில் ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நேற்று இரவே சென்னை வந்தடைந்தார். இந்த நிலையில் விஜய் சிபிஐக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
கடிதத்தில் என்ன கூறியுள்ளார்
டெல்லியில் விசாரணை நடத்துவதற்கு பதிலாக சென்னையிலேயே விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐக்கு விஜய் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி சிபிஐக்கு விஜய் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். கடிதத்தில், சிபிஐ விசாரணைக்காக நான் கடந்த 12.01.2026 மற்றும் 19.01.2026 ஆகிய தேதிகளில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு வழங்கப்பட்ட அறிவிப்புகளின்படி விசாரணைக்கு நான் ஆஜராகியுள்ளேன்.
கடந்த 8 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறைந்தது 10 - 15 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கோரியிருந்தேன். மேலும், எனது தனிப்பட்ட சிரமங்கள் மற்றும் வரவிருக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பணிகளில் உள்ள பணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தேன்.
நாங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான்
இந்த கோரிக்கைக்கு பிறகும், விசாரணை அதிகாரி என்னை மீண்டும் டெல்லியில் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். இந்த நோட்டீசை ஏற்று சிபிஐ விசரணைக்கு ஆஜரானேன். சட்டத்தை பின்பற்றும் ஒரு குடிமகனாக, விசாரணைக்கு ஆஜராகி எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். கரூர் சம்பவத்தில் நாங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான்.
நாங்கள் மிகுந்த வேதனையை அடைந்துள்ளோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதும் நானும் எனது கட்சியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளோம். தற்போது வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறேன்" என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications